கவிஞனின் செயலிழந்த அந்த நா




குறிப்பு-வடபழனியிலுள்ள ஒரு பழைய புத்தக கடையில், நெய்வேலியிலிருந்து வெளிவந்த வேர்கள் சிற்றிதழின் 1999 ஆம் ஆண்டு இதழ் கிடைத்தது.

அந்த இதழில் வெளிவந்த - "சிற்பி இலக்கிய விருது" தேவதேவனின் ஏற்புரை.

வேர்கள் இதழுக்கு நன்றி.
-------------------------------
ஒரு விருதின் தகுதியினை நாம் எவ்விதம் மதிப்பீடு செய்கிறோம்?அதன் அளவுகோல் என்ன?.... இதுபோன்ற சந்தர்ப்பங்களைக் குறித்து நான் சிந்தித்தையும் பேசியதையுமே இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்...அந்த விருதானது ஒரே சமயத்தில் அதை வழங்குவோர்க்கும் , அதைப் பெறுவோர்க்கும் , அவர்கள் வாழும் மொத்த சமுதாயத்திற்குமே பெருமைதரக்கூடியதாக இருக்க வேண்டும்,யார் யாருக்கு நன்றி சொல்வது என்ற கேள்வியே அழிந்துபோய் விடுகிற ஒரு கொண்டாட்டம் அது.

கவிஞர்கள் தாம் வாழும்காலத்தில் கண்டுகொள்ளப் படாமலேயே புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்கள்.அது அறிவார்ந்த தளத்தில் அந்தச் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தமையை நமக்குக் காட்டுகிறது.ஒரு கவிஞன் தான் வாழுங்காலத்தில் கொடுந் தண்டனைக்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான்.அரசு அதிகாரத்தின் வன்முறையை அப்போது நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்.ஒரு கவிஞன் தன் வாழுங்காலத்தில் அடையாளம் காணப்பெறுவதும் , கொண்டாடப்பெறுவதும் , அந்தச் சமூகத்தின் ஒரு பகுதியெனும் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நாம் ஆசுவாசிக்க முடிகிறதற்கான அடையாளம்தான்;முழு வெற்றி அல்ல.முழு வெற்ற அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சியில்தான் இருக்கிறது.


கவிஞனை மொத்த சமூகமும் முழுமையாய்ப் புரிந்துகொண்டது என்பது மனித வரலாற்றில் இல்லாத ஒன்று.கவிஞனும் தான் கண்டவற்றை வெற்றிகரமாய்க் கூறி முடித்துவிட்டான் என்ற நிலைமையும் இதுவரை இல்லாத ஒன்று.இந்த்த் தோல்விக்குக் காரணம் அவனது ஊடகமான மொழி .அவன் தன் வாழ்க்கையையே ஒரு ஊடகமாகக் கொண்டால்தான் என்ன? தோல்வியையே தழுவுகிறான்.கருணையைத் தன் இதயத்தால் துய்த்து அறிந்தவனும் சொல்லால் சாதிக்க முடிந்தது என்ன, கருணை என்ற சொல் போதாமல் போய் அதற்கு மேலும் இரண்டு முன் ஒட்டுப்(Prefix) பண்புச் சொற்களை(Adjectives) அழுத்தி அவன் தன் மனவெழுச்சியை மட்டும்தான் பதிவு செய்ய முடிந்தது தவிர மற்ற எல்லாமும் எளிதில் சாதிக்கப்படக்கூடிய அற்பங்கள்தாம் என்ற முடிவுக்கு வந்தவைகள்தாம்.


கவிஞனின் இத்தகைய மனவெழுச்சியால் கோர்க்கப்படாத படைப்புகளைத் துச்சமென மதித்துத் தூர ஏறிந்துவிடுவது மிகச் சிறந்த ஒரு மதிப்பீட்டுச் செயல் என்று கூற முடியும் .இலக்கியத் திறனாய்வு என்பது இதைக் கண்டடைவதற்கான ஒரு உளவு வேலையாகவும் சிக்கலான வேளைகளில் ஆகி விடுகின்றது.கவிஞனோ மிக எளியவனாகவும் மிகு உறுதிமிக்கவனாகவும் காட்சியளிக்கிறான்.ஏதோ ஒரு மையத்தினின்று பெறப்படும் அறமதீப்பீடுகளை வலியுறுத்தும் ஒரு அறவீனமுள்ள மூர்க்கனாக அடையாளம் காட்டப்படுகிறான்.அவனோ "ஆம்.அதை மையம் என்று கொள்வோமானால் பெருவியப்பு ஒன்றின் உன்னத நிகழ்வேதான்" என்னும் உணர்வுதான் அது என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொள்கிறான்.அவனிடமிருந்து வரும் அறமதிப்பீடுகளின் கருப்பையே அது.


தண்டனைகளைப் போலவே பாராட்டுகளாலும் சிதைந்துவிடாதவனாக இருக்கவே அவன் விதிக்கப்பட்டிருக்கிறான்.காரணம் அவனது பொறுப்பு தானும் சமூகமும் வேறுவேறு அல்லாத ஒன்றேயான ஒர் பொருள் மீது ஊன்றப்பட்டிருக்கிறது என்பதுதான.இன்று நாம் மிக நெருக்கடியான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் உலகின் மிகச் சிறந்த கவிதைகள் எல்லாமே மரணப்படுக்கையிலிருக்கும் ஒரு மனிதனின் அன்புக்கான கதறலே என்றும் அவன் அறுதியற்ற சொற்றொடர்களை உருவாக்கிய வண்ணமாய் இருக்கிறான்.அவன் கவிதைகளில் சமூகத்தின் சுரணையின்மைக்கு எதிரான சூடும் , அடுக்குமுறை , அதிகாரம் வன்முறை ஆகியவைகளுக்கு எதிரான அச்சமின்மையும் , கொண்டாடங்களின் சந்தோஷத்தில் தோய்ந்துவிடாத விழிப்பும் காணக் கிடைக்கிறது.எல்லாமாகவும் இருக்கிற ஒரு தனிமை அவனுடையது .அந்த்த் தனிமைத் துக்கத்தின் இன்னொரு பக்கமே 'சொல்லொணாத அமைதி' என்பதையும் அறித்திருக்கிறான்.

இவைகளெல்லாமே ஒரிடத்தில் படித்துவிட்டு இன்னோரிடத்தில் வந்து ஓதுகிற தத்துவங்கள் அல்ல.அப்படியானால்? நாம் சுட்டிக்காட்ட விரும்புவதும் , இயற்ற விரும்புவதும் ஒர் பிரக்ஞை நிலையைத்தான் என்பதே.அந்தப் பிரக்ஞை நிலையைத்தான் ஒவ்வொரு கவிதையும் ஆதர்சிக்க வேண்டும்.


நம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது என்பதிலும் ஒரு வளமான பாரம்பரியத்தின் வாரிசுகள் நாம் என்பதிலும் சந்தேகம் இல்லை.ஆனால் இந்தப் பெருமைகளால் நாம் சாதித்தது ஒன்றுமில்லை. அவலமான ஒரு தற்பெருமைக்குச் சமமானதுதான், ஒருவன் தன் நாட்டின் பெருமையைச் சார்ந்திருப்பதும்.கவிதை ஒரு மனிதனின் உள்ளார்ந்த சுகந்திரத்தையே அவாவுகிறது.ஒரு நாட்டின் நலமும் , அதன் சுற்றுச்சுழுலும் , பண்பாடும் அந்நாட்டு மக்களின் நெஞ்சிலே சுடர்கிற கவிதையைப் பொருத்துத்தான் அமையும் என்பதையே இந்த விழாவின் சந்தர்ப்பத்தில் பெரிதான ஒரு செய்தியாக சொல்ல விழைகிறேன்.... கவிஞன் என்றாலே பெருங்கணவுகளைக் காண்பவன் என்பது ஒரு பழைய மதிப்பீடு.மனித நல்வாழ்வுக்கான இஷ்ட லோகக் (Utopian) கனவுகளைக் காண்பவன் அவன் கனவு பங்கம் ஏற்பட்டு துஷ்டலோகக் (Dystopian) கனவுகளில் துடித்து தன் ஆழ்மன அலறலை சிறுசிறு துடிப்புகளாக எழுதிக் கொண்டிருந்தவனும் அவனே.

II


கலைகள் மீதும் கவிதை மீதும் ஆர்வம் முகிழ்த்திருந்த எனது தொடக்க காலத்தில் - 30 , 35 ஆண்டுகளுக்கு முன்பு - செய்தித் தாளின் மூலம் வடக்கே ஒரு கவிஞர் - அவர் பெயர் , ஆண்டு ஆகியவை நினைவில்லாத்தற்கு வருந்துகிறேன் - தீடீரென்று வாய் பேச இயலாது போய்விட்ட செய்தி என் மனதில் அழியாது பதிந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது.பின்னாளின் வாசிப்பில் ஃபிரெஞ்சுக் கவிஞர் போதெலோருக்கும் அந்த விபத்து நடந்துள்ளது என்பதை அறிந்தேன்.

சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான ஒரு விசேஷ நரம்பு மண்டலத்தை அவாவுகிற வேகத்தில் இஷ்டலோகத்திற்கும் (Utopian) துஷ்ட லோகத்திற்குமாய் (Dystopian) அதிர்கிற ஒரு நரம்பு நெறித்து அறுபட்டுவிட்ட நிலைதான் கவிஞனின் செயவிழந்த அந்த நா என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

அரசியல்வாதிகளால் சிதைக்கப் பட்டிருக்கும் இந்த உலகை உடல்நோய் மருத்தவர்களைக் கொண்டும், உளவியல் அறிஞர்களைக் கொண்டும் , சீர்திருத்திவிடப் பார்க்கிறோம். கவிதை மட்டுமே நமக்கு நம்பிக்கை தரும் என்பதற்கு கவிஞனே ஒரு சாட்சிப் பொருள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.தன்னைக் கவிஞன் என உணர்ந்து கொண்டுவிட்ட ஒரு உள்ளம்தான் இந்த பிரபஞ்சத்தின் மிக உறுதியான ஒரு பொருள். மற்றும் மனித விடுதலை அரசியல்வாதிகளின் கையில் இல்லை என்பதையும் மனிதனை உய்விக்க எழுந்த எல்லாச் சமயங்களும் ஏன் தோற்றுவிட்டன என்பதையும் இன்னும் அறியாதவனை நாம் எந்த சொல்லால் அழைப்பது?... கவிஞனிடம் திட்டவட்டமான சமயம் ஒன்று உள்ளது.அதை ஒருக்காலும் சாகடிக்க முடியாத சொற்களில் அவன் எழுதிக் கொண்டேயிருக்கிறான்.

கவிதை இல்லாத இடத்தில்தான் கவிதை ஒரு அலங்காரப் பொருளாகவும் , கவிதை ஒரு தொழிற்சாலையாகவும் , கவிஞர்கள் சாதாரண மனிதர்களாகவும் கருதப்படுவதும் தர்க்கத்திற்கு உட்பட்டதும் இயல்பானதுமான ஒன்று.நான் பேச விரும்புவது கவிதையை உணர்ந்து கொண்ட ஒரு சமூகம் அல்லது தான் கவிஞன் என்பதை உணர்ந்துகொண்ட ஒரு உள்ளம் பற்றி மட்டுமே.

நன்றி!!

No comments: