தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை



-1-


கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கேத்ரீனா போல் தன் வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழுமென பார்வதி எதிர்பார்த்ததிருக்கமாட்டாள்.ஏனேனில் அவளுக்கு கேத்ரீனாவை தெரியாது.கரமசோவ் சகோதரர்கள் நாவலையும் வாசித்ததில்லை.பார்வதி பேரழகி என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக அழகி. சிரிப்பதை விடவும் சிரிக்க முற்படும் தருணங்கள் அற்புதமானவை. தீமையின் நிழல்கூட விழாத தேவதையின் முகம், உண்மை அதுவல்ல என்றபோதும்.தன் சகாக்கள் போலன்றி ஸ்தனங்களை கச்சிதமாக துப்பட்டாவால் மறைக்ககூடியவள். அவளை பிறர் அநேகம் பார்ப்பதில் அவளுக்கு கர்வமோ, அகங்காரமோ இல்லை.மகிழ்ச்சி உண்டு.அலைபாய்ந்திடும் கண்கள்.அவளும் சிறுபெண் தானே.இதன் காரணங்களாலேயோ என்னவோ அவளை அதிகம் ரசிப்பான் ஸ்ரீனிவாசராவ்.

-2-


சுப்பையா பிள்ளையின் காதல்கள் என்ற புதுமைபித்தனின் கதையில் சுப்பையா பிள்ளைக்கு தினமும் தாம்பரத்திலிருந்து பீச் நோக்கி பயணம்.இன்று நிலைமை வெகு ஜோராக மாறிவிட்டது.ஸ்ரீனிவாசராவுக்கு திருவல்லிக்கேணியிலிருந்து தாம்பரம்.ஜீவிதம் பெரும்பாலான இளைஞர்கள் போல் திருவல்லிகேணியின் மேன்சன்களில் அல்லாமல் பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதியில்.செகந்தரபாத்தில் அவனது தந்தையுடன் வேலை செய்த சிநேகிதர் வீடு.அவர்களுக்கு ஒரே மகன்.மகனுக்கு கூர்ஹானில் வேலை.இவர்களுக்கு வீட்டை விற்க மனமில்லை.ஆக ஸ்ரீனிவாசராவ் இருக்கிறான்.பழைய வீடு.திண்ணை வைத்த பழைய வீடு! அவன்,வீடு அவ்வளவுதான். தினசரி பயணம் 21ஜியில்.

அதுவொரு எலக்டாரினிக்ஸ் நிறுவனம்.செல்போனுக்கான உபகரணங்கள் தயாரிப்பு பிரதானம்.அங்கே பார்வதியை பார்த்த மறுமுறை பார்க்காதவர் சகாய இருதய ராஜ்.உற்பத்தி துறையையும் , எலக்கிடிரிக்கல் துறையையும் கவனித்துக்கொள்பவர்.தொழில்நுட்பக்காரனின் மூளை.உதிரிகளை வைத்தே புதிய இயந்திரம் உருவாக்ககூடியவர்.அந்த நிறுவனத்தில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை இருக்கும் ஐந்தாறு தமிழர்களில் ஒருவர்!ஸ்ரீனிவாசராவ் இருப்பதால் உற்பத்தி துறையை பற்றி இருதய ராஜ் அதிகம் கவலைகொள்வதில்லை.பார்வதி அங்கே புதிதாக தொடங்கப்பட்ட ஒரு யூனிட்டுக்காக எடுக்கப்பட்ட ஐந்து எலக்டிரிக்கல் இன்ஜினியர்களில் ஒருத்தி.டிரெயினிங் முடிந்து வேலை நிரந்தரப்படும் தருணம்.


-3-


மார்கழி மாதத்தின் மாலையில் பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதி , பைகராப்ட்ஸ் ரோட்டின் பாதைசாலையில் பழைய புத்தகங்களின் குவிப்பு, தனியாக நின்றுகொண்டு ஏதேனும் பழச்சாறை பருகும் இளம் பெண்கள்,மதிய வெயிலின் காக்கை கரைப்பும் - சைக்கிள் பயணியும், இப்படியாக ஸ்ரீனிவாசராவுக்கு சில ரசனைகள்,பிரியங்கள் உண்டு.அதில் மோட்டார் சைக்கிள் ஒட்டுவதும் அடங்கும். ஜனசந்தடி அற்ற சாலையில் கீயர் மாற்றாமல் சீரான வேகத்தில் வண்டியை செலுத்தும்போது அவனும் வண்டியும் ஒர் உடல் ஆகும் நிகழ்வு அவனுக்கு அமைவதுண்டு. அப்படி ஒரு நிகழ்த்தலில் ஏதிரே எதோ ஒன்று பாய்ந்தது. மனிதன்!ரத்தம்.சலசலப்பு.ஆஸ்பத்திரி.லேசான சீராய்ப்புகள் இருவருக்கும்.சிகிச்சை முடிந்து அவனை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலருகேயிருந்த அவன் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டான்.பெயர் ரிஷி.கண்களில் கனவுகள்.ஆங்கில மருத்துவம் படித்தவன்.நவீன நாடகத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக மருத்தவ பயிற்சியோ, மேற்கொண்டு படிப்போ இல்லை. ஒரிரு நாடகங்கள் மேடையேறி இருக்கின்றன என்றான்.அதை சொல்லும்போதுதான் அவனில் எத்தனை மகிழ்ச்சி.கிளம்பும்போது தெருவில் எதிரில் அவள் வருவதை பார்த்தான்.அவளே தான்.அவள் வீடும் அங்கே இருக்கலாம்.சிரித்துவிட்டு வண்டியை கிளப்பினான்.

மறுநாள் அவள் அலுவலகத்தில் இவனை சந்தித்து நன்றி தெரிவித்தாள்.ஏன் என்றான். தன் சகோதரனை சிகிச்சை அளித்து விட்டில் வந்து விட்டதற்காக என்றாள். "சகோதரன்,அவன்,ஓஹோ" ஸ்ரீனிவாசராவின் வாய் திறந்த நிலையில் சில நொடிகள் இருந்தன.மேற்கொண்டு அவன் எதுவும் கேட்கவில்லை.அவளுக்கு பேசவேண்டும் போலிருந்தது.எதிர்வினையில்லாமல் என்ன பேசுவது. சென்றுவிட்டாள்.

-4-


உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவோ என்னவோ புதிதாக தொடங்கப்பட்ட யூனிட் முடப்படபோகிறது என்ற வதந்தி சில மாதங்களாக இருந்து வந்தது.வதந்திக்கு முற்றுப்புள்ளி.புதிதாக தொடங்கப்பட்ட யூனிட்டை சேர்ந்த அத்தனை பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட போகிறார்கள்.ஐந்து எலக்டிரிக்கல் இன்ஜினியர்கள், ஐம்பது டிப்ளமோ ஹோல்டர்கள் எல்லோருக்கும் வேலை போகப் போகிறது. இதனால் சில அடித்தட்டு வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை போகும்.வேலை போய்விடும் என்றால் யாரும் மகிழ்ச்சிகொள்வதில்லை.பார்வதியும் தான். சில நிமிடங்களில் ஸ்ரீனிவாசராவை சென்று பார்த்தாள்.எதாவது செய்ய முடியுமா என்று கேட்டாள்.ஸ்ரீனிவாசராவுக்கு ஆறுதலாகவோ,வேடிக்கையாகவோ பேச தெரியாது. அவளிடம் பேசலாமேன்று நினைத்து பிறகென்ன திருமணம்தானே என்றான்.அவளது முகம் சுனங்கி போயிற்று.யார் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கேட்டவள் தொடர்ந்து பேசினாள்.அவளது தந்தை விசாகப்பட்டணித்தில் கண் மருத்துவர். அவளுக்கு சிறு வயதுயிருக்குபோதே அவளது தாயை விடுத்து வேறோரு பெண்னோடு தொடர்பு வைத்துக்கொண்டார்.பின்பு திருமணமும் செய்து கொண்டார்.தங்களின் பொருளாதார தேவைகளுக்கு தன் மாமாதான் பெரிதும் உதவினாரென்றும், இப்போது தன் தாய் அவர் வீட்டில்தான் வசிக்கிறாரென்றும் சொன்னாள்.மாமா வீட்டில் எல்லோரும் அன்போடுதான் பழகுகிறார்கள், ஆனால் இனி எப்போதும் அவர்களை அனுகமுடியாத அளவுக்கு தன் சகோதரன் நடந்து கொள்வதாகவும் சொன்னவள், இந்த எரிச்சலை அவர்கள் கொஞ்ச காலமாக தங்கள் மீதும் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்றாள்.அதனால் அவளது ஒரே குறிக்கோள் தாயை அவளோடு அழைத்து வரவேண்டும். அதற்கு அவள் வேலையில் இருக்க வேண்டும். அவளது சகோதரன் இது ஏதுவும் புரியாமல் நிழல்களில் வாழ்கிறான் என்று வருந்தினாள்.சாதாரணமாக ஸ்ரீனிவாசராவ் முசடன்.இது போன்ற ஒரு சந்தர்பத்தில் அவன் பேசியிருக்க்கூடியது 'பார்க்கலாம், என்னால் முடிந்தது செய்கிறேன்' இதுதான்.ஆனால் அன்று அவன் வேறு விதமாக பேசினான்.பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதியில் தன் அறையிருக்கிறது என்றான்.அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன என்றாள்.நாளை தன் அறைக்கு வந்து சென்றால் வேலை சம்பந்தமாக முயற்சிப்பதாக சொன்னான்.அவனை பார்த்த கண்கள் அப்படியே தாழ்ந்துபோயின.சென்றுவிட்டாள்.

மனிதர்களுக்கு பதற்றமான நேரங்களில் மூளை செயலிழந்து விடுகிறது.பார்வதிக்கு இப்போதுள்ள வேலையில் பதினையந்தியாரம் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால் மூனாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் வரை ஏதாவது கிடைக்கும்.அவளது கஷ்டத்தை பார்த்து ரிஷி கூட வேலைக்கு செல்ல ஆரம்பிக்கலாம்.விரைவில் அவளுக்கு நல்ல வேலை கிடைக்கவும் செய்யலாம்.எல்லாவற்றையும் விட தன் சகோதரினிடம் பேசலாம்.ஆனால் மனம் அப்படி சிந்திக்கவில்லை.வேலை போய்விட்டால் அவ்வளவுதான்.வீட்டு வாடகை, சகோதரன், தாய், வேறு வழியில்லை.வீட்டு வாடகை, சகோதரன், தாய், வேறு வழியில்லை.வேறு வழியேயில்லை.எல்லாம் சுவரில் சென்று முட்டிக்கொண்டது.

-5-



அவள் சென்றாள்.பித்தளையில் சங்கு சக்கரம் பொருத்தப்பட்டுயிருந்த அரையடிக்குமேல் கணமான மரக்கதவை தள்ளினாள்.திறந்தது.உள்ளே தாவாரத்தில் வெயிலின் நிழலாடியது.அவன் லுங்கியும் டீசர்ட் அனிந்தவாறு படுக்கையில் சாய்ந்து கிடந்தான்.இருட்டறை.ஈரத்துணிகளின் நாற்றம்.அவள் வரக்கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.சற்று அதிர்ச்சிதான்.காட்டிக்கொள்ளவில்லை.எழுந்து விளக்கை போட்டான்.அறையினுள் சென்றாள்.வெள்ளை நிறத்திலான சுடிதார் அனிந்திருந்தாள்.இரவு முழுக்க அழுதிருப்பாலோ,தெரியவில்லை.அங்கேயிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமரச்சொன்னான். ரெடாக்ஸின் தரை தண்னென்றுயிருந்தது.அமர்ந்தவாறு அவளின் முகத்தையே பார்த்தான்.என்ன வயசு என்று கேட்டான்.இரவைரெண்டு என்றாள் சன்னமான குரலில்.மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.அவளை பரிகாசத்தோடு பார்த்தான்.சொன்னவுடனே வந்துவிட்டாயே வெட்கமே இல்லையா என்று கேட்டு பரிகாசம் செய்தான்.அவள் அழவில்லை.அவனை பார்க்கவுமில்லை.பரிகாசம் வெறுப்பாகி அவள் மீது காறி உமிழ வேண்டும் போல தோன்றியது.வெறுப்பு,வெறுப்பு, அதன் உச்சம்.சட்டென்று ஏனோ அவனுக்கு அன்பு பீறிட்டு எழுந்தது.பைத்தியக்காரி,எழுந்து ஓடு என்று கத்தினான்.பார்த்தாள்.நின்றால் அடித்துவிடுவேன் ஓடு என்று பயங்கரமாக கத்தினான்.சிறுமி.நிஜமாகவே ஓடினாள்.

-6-


அவன் அதன் பிறகு அலுவலகத்திற்க்கு சில நாட்கள் செல்லவில்லை.அவள் வீட்டுக்கு அவள் இல்லாத சமயத்தில் ரிஷியை கான சென்றான். உங்களை பார்க்கத்தான் வந்தேன் என்றான்.சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசினார்கள்.ஏன் மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க்கூடாது , அல்லது பயிற்சி செய்யக்கூடாது என்று பட்டென்று கேட்டுவிட்டான். உனக்கென்ன என்று ரிஷி கேட்கவில்லை.நாடகம் தனக்கு உயிரென்றும் ,வேறெதிலும் தன்னால் ஈடுபாடு காட்டமுடியவில்லை என்றும் சொன்னான்.ஆனால் அது ஆத்மார்த்தமான பதிலாக தெரியவில்லை.அதை சொல்லும்போதே அவன் மண்டையில் எதிர்வினைகள் ஒடிக்கொண்டிருந்தது போலும்.அவனோடு தர்க்கம் செய்ய வரவில்லையென்றும் , ஒரு யோசனை இருக்கிறது கேட்கமுடியுமா என்றும் கேட்டான்.தனக்கு தெரிந்த ஒரு உளவியல் மருத்துவர் அவரிடம் சிகிச்சை பெறும் மனநோயாளிகளுக்கு என்றே பிரத்தேயகமாக நாடகம் நடத்துகிறாரென்றும், அவரிடம் சென்று சிறிது காலம் நாடகம் சம்பந்தமாக வேலை செய்தால் பின்னர் மருத்துவ துறையில் கூட அவனுக்கு ஆர்வம் எற்படலாம், முயற்சித்து பார்கலாமே என்றான். அவரின் பெயரை கேட்டான்.சொன்னான்.ஆச்சரியத்துடன் அவர் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆயிற்றே, நாடகத்தில் அவருக்கு ஈடுபாடு உள்ளதென்று தனக்கு இதுவரை தெரியாதென்றும் , அவசியம் சென்று பார்பதாகவும் சொன்னான்.

ஸ்ரீனிவாசராவ் கிளம்பினான்.வாசல் வரை வந்தவனிடம் ஏன் குற்றவுணர்ச்சியா என்று கேட்டான். இல்லை. அப்படியென்றால் தன் சகோதரி மீது காதலா என்றான்.அவன் முகத்தில் பரிகாசம் தெரியவில்லை.அது ராவை ஆசுவாசப்படுத்தியது.இல்லை தனக்கு அது போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ளவே முடிந்த்தில்லை என்றவன் தயங்கியவாறு தன் மீது கோபம் இல்லையா என்று கேட்டான்.இல்லை.மாறாக உன்னிடம் நெருக்கமாகவே உணர்கிறேன்.கீழ்மையின் உச்சத்தில் மேண்மை , நீ தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரம் , அவரை வாசித்திருக்கிறானா என்று கேட்டான். தான் ஏதையும் வாசித்த்தில்லையென்றும் , ஆனால் தான் சொன்ன உளவியல் மருத்துவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி பேசுவதை கேட்டிருப்பதாகவும் சொன்னான்.மிக முக்கியமாக , அங்கே வரும் மனநோயாளிகள் பலருக்கு பிரச்சனை வேறேதோ.அவர்கள் பாவனை செய்வார்கள்.விஷயம் என்னவென்றால் அவர்கள் பாவனை செய்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கண்டுபிடிப்பதும் கஷ்டம்.அது போன்ற சந்தர்ப்பங்களில் உரையாடல் மட்டுமே தீர்வு.அப்போது தஸ்தாயெவ்ஸ்கியை படித்ததும்,படிப்பதும் மிகவும் உதவுவதாக சொல்வார் என்றான்.
ஆம் அவர் அமரர் என்றான் ரிஷி.ஸ்ரீனிவாசராவுக்கு வேறு சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.மறுபடியும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியாது. பார்வதி மீதும் அவனுக்கு கோபமில்லையா என்று கேட்டான்.தனக்கு தன் மீது மட்டும்தான் கோபம் என்றான்.அவள் என் இருப்பையை நிராகரித்துவிட்டாள்.எல்லா விஷயங்களும் முடிந்தபின் தனக்கு அதை செய்தியாக மட்டுமே அவள் சொன்னபோது தன்னால் எந்த எதிர்வினையும் செய்யமுடியவில்லையென்றும், மனம் மிகவும் அலைகழிந்து கிடப்பதாகவும் சொன்னான்.ஸ்ரீனிவாசராவுக்கு ஏனோ எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணம் வந்தது.நிம்மதியாக உணர்ந்தான்.அவளுக்கு வேறு வேலை கிடைத்ததா என்று விசாரித்தான். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு சிறு நிறுவனத்தில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாக சொன்னான். மகிழ்ச்சி ,மிக்க மகிழ்ச்சி. முகத்தின் அந்த மகிழ்ச்சியை ரிஷியிடம் காட்டவிரும்பாமல் வருகிறேன் என்று சொல்லி திரும்பிவிட்டான்.

-7-



சில நாட்களில் ரிஷி சென்று மருத்தவரை சந்தித்தான்.மார்பு வரை நீளும் மெண்மையான வெண்தாடி.கதர் ஜிப்பா.அவர் அவனது வலது கையை தன் இரு கைகளாலும் பற்றினார். அப்போது தான் உணர்ந்தான்.அவருக்கு அந்த வயதிலும் உறுதியான உடல்.ஒடுங்கிய வயிறு.உயரம் ஆறடிக்கும் மேல்.அவனது பார்வையை புரிந்து கொண்டவர் சிரித்தார்.அவனது நாடக விருப்பங்கள், அவனது ஆசைகள் அனைத்தையும் பற்றி சொன்னான்.அவருக்கு கார்வையான குரல்.சொன்னார். உங்கள் மனம் மிகவும் அலைகழிந்து கிடக்கிறது. கவலைபடாதீர்கள். இதுவே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆசி.
நீங்கள் பேசும் போது இன்றைய பலரைப் போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையிருக்கிறதா என்று பார்த்தேன்.இல்லை.உங்களுக்கு மனிதர்கள் மீது உண்மையான அன்பு இருக்கிறது.இந்த வருடம் இங்கே வேலை செய்யுங்கள்.எது எதில் உங்களை ஈடுபடுத்தி கொள்வதென்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.ஒரிரு வருடங்களில் நீங்கள் உளவியல் துறையில் மேற்கொண்டு படிக்கலாம். படிக்க வேண்டும்.கட்டளையிட்டார்.அவன் ஏதுவும் பேசவில்லை.மேலும் நாடகத்தின் மீதான ஈர்ப்பை அவன் குறைத்துக்கொள்ள தேவையில்லை, அதுவே அவனை சிறந்த உளவியல் மருத்துவர் ஆக்கும் , இது உறுதி என்றார்.இப்போது புறப்படுங்கள் என்று அவர் சொல்வது போல் அவனுக்கு பட்டது. அவரின் கால் தொட்டு வணங்கினான். உங்கள் கனவுகள் நனவாகட்டும் என்று ஆசிர்வதித்தார்.அவரை பார்த்தான்.வாஞ்சையாக சிரித்தார்.நீங்கள் என்னை புனிதர் போல பார்க்கீறிர்கள். நாளையே நீங்கள் என்னை முழுவதுமாக வெறுக்ககூடிய செயலை நான் செய்யக்கூடும்.பொறுக்கிகள் புனிதர்கள்,குழந்தைகள் பெரியவர்கள்,பரதேசிகள், பணக்காரர்கள்,அரசர்கள் அடிமைகள் எல்லோரும் மண் மேல் நிற்கும் மனிதர்கள்தான்.இதை உணர்ந்து கொண்டால் தூய அன்பு பெரிய விஷயமில்லை."என் ஆசிர்வாதங்கள்" என்றார்.ரிஷி புறப்பட்டான்.

ஸ்ரீனிவாசராவ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு , செக்ந்திரபாத் சென்று வேறு வேலை பார்த்துக்கொள்ளலாமென்று முடிவு செய்தான். ரிஷியிடம் தொடர்பிலிருந்தான்.பார்வதி அவனிடம் பேச முயற்சி செய்தாள்.அவன் பேசவில்லை.ஒரு நாள் வீட்டிற்க்கே வந்து விட்டாள். அவளை ஏதுவும் பேச அவன் அனுமதிக்கவில்லை.தானே செகந்திரபாத் செல்லும்முன் பார்த்து செல்ல நினைத்தாகவும் வந்ததில் மகிழ்ச்சியே என்றும் சொன்னான். நான் சொல்வதை மட்டும் கேட்டுவிட்டு இங்கிருந்து சென்றுவிட வேண்டும்.உன் தாயை எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு விரைவாக அழைத்துக்கொள்.நீ சிறுமி.எக்காரணத்தைக்கொண்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ளாதே.ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள் , பெரிய விஷயங்களில் அல்ல, சிறு சிறு விஷயங்கிளிலே மனிதன் முழுமையாக வெளிப்படுகிறான்.மனிதர்கள் பண்முகங்களால் ஆனவர்கள்,கூர்ந்து கவனி, உனக்கானவன் உனக்கு கிடைப்பான்.இப்போது செல் என்றான்.நீங்கள் என்றாள்.எனக்கு தற்செயலில் நம்பிக்கை உண்டு.நீ செல் என்றான்.வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.பிறகு அவர்கள் வாழ்வில் எப்போதெனும் சந்தித்திருக்கலாம்,சந்திக்காமலும் போயிருக்கலாம்.சுபம்.

No comments: