நாட்டாரியல் வரலாறு




குறிஞ்சிப்பாடி அருகே கஞ்மநாதம்பேட்டை என்கிற கிராமத்தில் எனது தாத்தா காலத்தில் இருந்திருக்கிறார்கள். தெலுங்கு பேசும் கம்மவார்களான இவர்கள் எப்படி அங்கே சென்றார்கள், விவசாயம் செய்தார்கள்.இதை அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அது ஒரு வரலாறை நமக்கு கொடுக்கும். அந்த வரலாற்றின் மூலம் நமக்கு கிடைக்கும் தரிசனம் பல வாசல்களை திறக்கும்.அந்த வரலாறு, நாட்டாரியல் வரலாறாகத்தான் இருக்கமுடியும்.

நாட்டாரியல் என்ற பெயரை சொல்லிக்கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது.

கி.ராஜநாரயணனின் கோபல்ல கிராமம் என்ற நாட்டாரியல் நாவல் 1976ல் முதல் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

கம்மவார்கள் தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து தெற்கே பல மைல் தூரம் சிறு சிறு குழுக்களாக ஏதேதோ காரணங்களுக்காக வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழ் பேசும் மண்ணின் பல இடங்களுக்கு புலம்பெயர்ந்திருக்கின்றனர்.அப்படிப்பட்ட ஒரு குழுவைப்பற்றிய நாட்டாரியல் வரலாறு இந்த நாவல்.நூற்றி மூப்பத்தி ஏழு வயது நிரம்பிய மங்கத்தாயாரு அம்மாள் தன் நினைவாக சொல்லும் நாட்டாரியல் வரலாறு. அதில் வரும் யதார்தத்திற்கு மீறிய காட்சிகளே நம்மை வசீகரிக்கிறது.யதார்தத்தின் ஆழ்மன உணர்வுதான் கற்பனை என்று எம்.என்.விஜயன் பஷீர் பற்றிய பஷீர் எனும் தனிமரம் கட்டுரையில் சொல்கிறார். அது உண்மை.

சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலில் முதல் பகுதியில் ஆசான் மூலமாக விவரிக்கப்படும் வரலாற்றை படிக்கும் போது ஏற்படும் உணர்வு , பின்பு விவரிக்கப்படும் நாவலின் சமகாலத்திய வரலாற்றில் இல்லை. அதற்கு காரணம் அந்த ஆசானின் மொழியில் இயல்பாக வெளியாகும் யதார்த்திற்கு மீறிய சொல் முறையே. இதை பொய் என்று ஒதுக்க முடியாது. நாம் சொல்வது நம் மனதில் இருக்கும் காட்சி பிம்பங்களையே.உண்மைகளை அல்ல.

அதே நேரத்தில் இதுபோன்ற கற்பனைகளை,கவித்துவங்களை ஒரு எழுத்தாளன் மிகவும் சிரத்தை கொண்டு செயற்கையாக உருவாக்கினால் அது திகட்ட கூடும்.எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவலில் வரும் கவித்துவம் வாசகனை கிறுகிறுக்க செய்யக்கூடியது. படித்த சில நாட்களுக்குப்பின் அந்த கிறுகிறுப்பு மறைந்தபின் எஞ்சுபவை என்ன என்பது தான் முக்கியம். நெடுங்குருதி நாவலின் மூலமே இன்று நான் வெயிலை ரசிக்கிறேன். ஒளிக்கற்றைகளை பார்க்கும்போது மனம் கொள்ளும் எழுச்சி ஆச்சர்யம் அளிக்கிறது.யாமத்தில் அது செயற்கையாக மிகைபடுத்தபட்டுவிட்டதால் அந்த வசீகரம் இப்போது மறைந்துவிட்டது.

கோபல்ல கிராமம் நாவலில் வரும் , நாவலின் சமகாலத்திய பதிவுகளும் , கழுமரம் பற்றிய குறிப்புகளும் மிக முக்கியமான ஆவணங்கள்.ஒரு கலைஞன் என்பவன் யார்? எல்லா மனிதர்களையும் மனிதர்கள் என்று உளப்பூர்வமாக ஏற்றவன். அதை தன் மொழியில் நிரூபிப்பவன். கி.ரா. நம் காலத்து மூத்த கலைஞன்.அவருக்கு என் வணக்கங்கள்.


என் வாழ்க்கையில் என் மூதாதையர்களின் கதையை ஒரளவுக்கேனும் தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.சாதிய நோக்கத்தில் இதை தெரிந்து கொள்ளவோ , ஆர்வம் கொள்வதோ கூடாது என்ற பூச்சுகளையெல்லாம் ஏற்கவே தேவையில்லை. அவை நம்மை எங்கும் ஈட்டுச் செல்லாது , வெறும் மண் மேல் நிற்கும் மனிதர்களாக்கி விடும். அது ஏற்படுத்தும் வெறுமை நம்மை தனிமனிதனாக உலகை நோக்க செய்யும். பிறகென்ன தனிமனிதர்களாகி இருப்பு சார்ந்த துயர் பேசுவோம்.

கோபல்ல கிராமம் - அன்னம் வெளியீடு



No comments: