பார்வை





சோப்பு பவுடர் விற்க வரும் பெண்ணின் பார்வை. அந்த வீட்டு பெண்ணின் பார்வை.விற்பனை பெண் என்ன படித்திருக்கிறாள் என்பதற்கு பி.ஏ. என்கிறாள். சாதி - கிறுஸ்துவம். இருந்தது போலவே இருக்கக்கூடாதா என்ற வீட்டு பெண்மனியின் கேள்விக்கு பதிலாய் சிறிய சயசரிதை. இதில் விற்பனை பெண்ணின் பார்வை இந்த சோப்பு பவுடர் துணிக்கும் அழுக்குக்கும் இடையில் புகுந்து அழுக்கை நீக்கும் என்பதில் இருக்கிறது. இன்னும் பல வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் இருக்கிறது.மற்றவருக்கோ பார்வை அவள் படிப்பில் , சாதியில் இருக்கிறது.பொழுதை கழிப்பதில் இருக்கிறது.தன்னுடைய தங்கை ஒரு மழை நாள் இரவில் கண்ணை இழந்துவிட்ட பின் அந்த வீடு அதன் பார்வையை இழந்தது.ஒரு வயோதிகர் பிச்சை கேட்க வந்த பொழுதில் கர்த்தரை ஜபி வெளிச்சம் உண்டாகும் என சொல்லி செல்கிறார். கர்த்தரை தாயும் அக்காளும் ஜபிக்கிறார்கள்.தந்தைக்கு விருப்பமில்லை. தங்கைக்கு லேசாக பார்வை திரும்புகிறது.தந்தையும் ஜபிக்கிறார். தங்கைக்கு முழுவதுமாக பார்வை திரும்பி அச்சமயம் டீச்சர் டிரெயினிங் சென்று கொண்டிருக்கிறாள்.இதில் அந்த விற்பனை பெண்ணின் தத்துவ பார்வை.பிரக்ஞைபூர்வமான பார்வை.அவளுடைய தங்கையின் பார்வை. முக்கியமாக கர்த்தரின் பார்வை. வாதை இனி உன் கூடாரத்தை அனுகாது என்பதாக கர்த்தரின் பார்வை.இந்த சுயசரிதை முடியும் போது வீட்டு பெண்ணுக்கு கிறுஸ்துவளாக அவள் மாறியதிலிருந்த விமர்சனப் பார்வை போய்விடுகிறது. பிரக்ஞை இருந்தால் தானே விமர்சனம்.விற்பனை பெண்ணின் சுயசரிதையில் அவள் பிரக்ஞையை இழந்துவிடுகிறாள்.இதில் இன்னொன்று .அதே விற்பனை பெண்ணிடம் இருக்கும் நடைமுறை பார்வை. மீதி இரண்டு சாம்பிள் சோப்பு பவுடர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு காரர்கள் இருக்கும் போது அவர்களிடமே வந்து தந்து விடுவதாக சொல்லி கிளம்புகிறாள்.எல்லா மனிதர்களிடம் இரண்டு பார்வைகள் இருக்கிறது.லெளகீக பார்வை. தத்துவ பார்வை.அதை இந்த சிறுகதை சிறப்பாக சொல்கிறது. மிக சாதாரணமாக ஒரு விற்பனை பெண் வந்து செல்லும் காட்சி. அதில் தான் எத்தனை பார்வை. நான் அசந்து போய்விட்டேன். அசோகமித்திரன் பார்வை என்ற இந்த சிறுகதையில் இன்னும் எனக்கு தெரியாத எத்தனையோ உள் சரடுகள் உள்ளன.
அசோகமித்திரன் சாதாரணமாக ஏதேதோ சொல்லிவிடுகிறார்.



No comments: