இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்


கவிதை தனிமொழியாலானது. அந்த தனிமொழியை அறிந்தவன் அல்ல நான். இந்த குறிப்பு நான் கவிதைகளை புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி மட்டுமே.இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளை வாசிக்கும் போது அதில் சில இடங்களில் சுகுமாரனின் தொடர்ச்சியை பார்க்க முடிகிறது.உதாரணமாக சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள் கவிதையொன்றில் நாம் எப்போதும் இருப்பது கோடைகாலத்தில் தானே என்கிற வகையில் ஒரு வரி வரும். அதன் தொடர்ச்சியை நாம் கோடை கவிதையிலும் பார்க்கலாம்.கோடையில் வாழ்ந்து கோடையில் மடிகிறேன் என்று முடிகிறது இந்த கவிதை. எந்த ஒரு படைப்பாளியுமே தன்னை வரையறுத்திக்கொண்டு முன்வைப்பதில்லை.ஆனால் ஒரு வாசகன் அதை ஏதேனும் ஒரு வகையில் தொகுத்துக்கொள்ள பார்க்கிறான்.அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் இந்தக்குறிப்பும்.

ஒரு நகரித்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் எப்போதும் எதிர்பாராமையோடு பகடையாடிபடியே இருக்கிறார்கள். அந்த நாளின் வரவு எப்படியிருக்கும் என்று அவர்கள் படபடப்புடனே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சித்திரங்கள் இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளில் தொடர்ந்து வருகிறது. கதவு என்றோரு கவிதை.கதவு என்பது ஒரு வாய்ப்பிற்கான வாசல்.வெவ்வேறு வாய்ப்புகளுக்காக திறப்புகளுக்குகாக சதாகாலமும் மூடப்பட்ட கதவின் முன் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இது திறக்காது என்றால் பிரச்சனையில்லை.எல்லோரும் சென்று உறங்கிவிடுவார்கள். ஆனால் அவ்வப்போது அது திறக்கப்படுவதற்கான சமிக்ஞைகள் வந்தபடியே இருக்கின்றன.ஆக அவர்கள் திறக்கப்படாத கதவின் முன் நெடுங்காலம் காத்திருக்கிறார்கள்.இந்த காத்திருத்தல் தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல் பற்றிய கவிதையாக நம்பிக்கையின் தேவதை என்பதில் வருகிறது.அன்றைய நாளில் எந்த பொம்மைகளையும் விற்க இயலாமல் வீடு திரும்ப யத்தனிக்கும் சித்திரம் பொம்மைகள் விற்பவன் என்ற கவிதையில் வருகிறது. வேட்டையில் சிறு முயல்கூட கிடைக்காமல் வீடு திரும்பும் ஒருவனின் கையறு நிலை வீடு திரும்புதல் கவிதையில் வருகிறது.இதையே நாம் முல்லா, கிறிச் கிறச்,நெய்தல்,குழந்தை கவிதைகளிலும் பார்க்கலாம். இந்த கவிதைகளை பற்றி பாவண்ணன் சொல்வது போல மேலும் ஒரு சித்திரம் இருக்கிறது. வீடு திரும்புதல் பிரச்சனையில்லை.வெறும் கைகளோடு வீடு திரும்புதல் தான் பிரச்சனை.அதனால் தான் வேட்டைக்கு சென்றவன் வழியில் சில நாவற்பழங்களையும் மரவள்ளிக் கிழங்குகளையும் சேகரித்து செல்கிறான்.

இருத்தலியம் சார்ந்த கவிதைகளையும் இவர் எழுதியிருக்கிறார். மேலே சொன்னது போல கோடை அப்படியானதொரு கவிதை. கான்கீரிட் இறுக்கத்திலிருந்து விடுப்பட்டு சூறைக்காற்றாய் மாறி அலையத் துவங்கினான் உலகத்து வீதிகளில் என்ற அவதாரம் கவிதை , ஒரு நாளின் இரவில் வீடு திரும்புபவனின் இழப்புகள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கும் நகரம் வசன கவிதை , கானாமல் போன மரப்பாச்சி பொம்மையை போல தானும் கானாமல் போவது எப்படி என ஏங்கும் மரப்பாச்சி கவிதை, குழந்தைமையின் நாட்களை இழந்துவிட்டதின் ஏக்கத்தை முன்வைக்கும் சிறுவன் ததாதிதீ கவிதை , தினம் தினம் கொலை செய்யப்படுகிறது என் பிணம் என ஒவ்வோரு நாளின் இருத்தல் சார்ந்த துயரை பேசும் கொலையுறு பிணம்,மேடையில் தன் வசனங்களை பேச இயலாமல் பொருத்தமில்லாத வசனங்களை பேச நேரும் மேடை கவிதை , சதா கண்காணிக்கப்படும் சித்திரத்தை தரும் சுதந்திரம் கவிதை ஆகியவற்றை ஒருவகையில் இருத்திலியம் சார்ந்த கவிதைகள் என்று வகைமை படுத்தலாம்.இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவது தேவையற்றது என்றும் இது போன்ற கவிதைகள் நிறைய எழுதப்பட்டிருக்கிறது என்றும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் அதை ஒரு கவிஞன் பொருட்படுத்த தேவையில்லை என்று தான் நான் சொல்வேன். வேறு எப்போதும் விட இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இயந்திரம் போல இருக்கிறோம். கான்கீரிட்டின் இறுக்கத்தை பொறுக்க முடியாமல் மூச்சு விட கட்டிடத்தை விட்டு கொஞ்ச நேரம் சாலையில் வந்து நின்றுகொள்வேன் நான் அவ்வப்போது. ஆக இது ஒரு சூழலின் பிரச்சனை.அது பாடுபொருளாக இருக்கத்தான் செய்யும்.அந்நியமாதல் இருக்கையில் இருத்தலியம் சார்ந்த கவிதைகள் இருப்பதில் என்ன தவறு.ஆட்டத்தின் விதிகளில் இல்லாமல் என்னை சற்று வெளியே உலாவ விடுங்கள் என்கிற ரீதியிலான கவிதைகளும் இதில் இருக்கின்றன.ஊழியன் & கம்பெணி(பி) லிமிடெட் ஒரு படைப்பாளி தன் ஆளுமையை எப்படி ஒரு நிர்வாகத்திற்கு தகுந்தாற் போல கத்திரித்து கொள்ள வேண்டிருக்கிறது என்பது பற்றிய கவிதை.என் பகல் நேரத்தை எடுத்துக்கொள்கிறாய் இரவையாவது எனக்குக் கொடு என்று பண நோட்டில் இருக்கும் கானுறை வேங்கையிடம் இரைஞ்சும் சித்திரம்தான் கானுறை வேங்கை கவிதை.ஆட்டம் ,Mr.இடியட் என்ற கவிதையும் ஆட்டத்தின் விதிகளை பற்றிய கவிதை தான்.

இந்த வகையான மேலே சொன்ன தொகுப்புக்குள் அடங்காத கவிதைகளும் நிறைய இந்த தொகுப்பில் இருக்கின்றன். எனக்கு இந்த தொகுப்பில் மிகவும் பிடித்த கவிதை ஈரச்சாட்சி.மழை , ஜன்னல் வழியாக தூக்கு மாட்டும் ஒருவனை பார்க்கும் காட்சி மிகுந்த கவித்துவமானது.சட்டென்று ஒரு சித்திரத்தை மனதில் கொண்டு வந்து விடுகிறது.இன்றைய விளம்பரங்களை பற்றிய ஒரு நல்ல கிண்டல் தேவ செய்தியாளர்கள்.இந்த கவிதை தொகுப்பில் தேவையற்றது என்ற தோன்றிய கவிதை - கவிதையாம்... என்ற கவிதை.

காயசண்டிகை - இளங்கோ கிருஷ்ணன் - காலச்சுவடு வெளியீடு.



மஞ்சள் வெயில்



நண்பர் ஒருவர் ஒருமுறை ஒரு ஐந்தாறு புத்தகங்களை ஒரு பாலிதீன் பையில் போட்டு என்னிடம் வந்து நீட்டினார். என்னவென்றேன். தன் இருப்பிடத்தில் புத்தகங்களை வைத்து கொள்ள இடமில்லாததால் இவற்றை உங்கள் வீட்டில் வைத்து கொள்ளுங்கள் என்றார். எனக்கு அவர் காரணம் பிடிக்கவில்லை. வாங்க மறுத்தேன். அவர் திணித்தார்.அதற்கு மேல் எதிர்ப்பை காட்டாமல் வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு ஒரத்தில் கிடத்தினேன். பிறகு சில நாட்கள் கழித்து அதில் உள்ள புத்தகங்களை எடுத்து என் புத்தக அலமாரியில் அடுக்கினேன். அப்போது பிரமளின் கவிதை தொகுப்பை எடுத்து புரட்டினேன். நிறைய கவிதைகள் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தின.அது போல ஏதேர்ச்சையாக இணைய தளங்களில் உலாவி கொண்டிருந்த போது இன்று என்ன செய்யலாம் என்று மணம் யோசித்து கொண்டிருந்தது. சட்டென்று புத்தக அலமாரியிலிருந்து நண்பர் கொடுத்திருந்த மஞ்சள் வெயில் புத்தகத்தை அடுக்குகளிலிருந்து உருவினேன். என் மிக நெருங்கிய நண்பர் பட்டுக்கோட்டை ஹவுசிங் யூனிட்டின் இரவுக் காவலராக இருந்த திரு.வி.கே.பாலகிருஷ்ணன் (நிறுவனர் : பழஞ்சூர் தமிழ் முற்றம்) அவர்களின் நினைவுக்கு அடிபணிந்து.... என்றிருந்தது. தொடர்ந்து வாசிக்கலாமா அல்லது வேறு எதாவது புத்தகத்தை வாசிக்கலாமா என்று எண்ணியவாறு அடுத்த பக்கத்தை புரட்டினேன். அன்பிற்குரிய ஜீவிதா... என்று ஆரம்பமான வரிகளை வாசித்த பின் தொடர்ந்து சில பக்கங்களை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவித்துவமான வரிகள்.சட்டென்று உள்ளிக்கப்பட்டேன். தொடர்ந்து வாசித்து முடித்தேன். தான் விரும்பிய பெண்ணுக்கு எழுதப்பட்ட கடிதம் தான் இந்த நாவல் அல்லது குறுநாவல். ஒரு தன்னிலை விளக்கம். கூச்ச சுபாவமும் வெட்கமும் பிறவி குணங்களாகி போன கதிரவன் ஒரு பெண்ணுக்கு எழுதிய கடிதமே இந்த மஞ்சள் வெயில்.இந்த புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் சிலவற்றில் நான் என்னை பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட கதிரவன் அளவுக்கே வெட்கமும் கூச்சமும் உடையவன் தான் நானும்.ஒரு மாதிரி வேலையிடங்களில் பொது இடங்களில் சமாளித்து கொள்வேன். அதுவே நாவலின் ஆரம்ப பக்கங்களில் வசீகரத்தை ஏற்படுத்தியது. பெண்களிடத்தில் மட்டும் கூச்சம் அடைகிறவர் அல்ல கதிரவன். ஒரு முறை தான் முகப்வோவியம் வரைந்த கவிதை புத்தக வெளியீட்டு விழாவில் தன்னை மேடைக்கு அழைக்கும் போது கூச்சம் மிகுந்து வெளிறி போகிறார் கதிரவன்.ஆக அது அவர் குணம். அவர் ஒரு தினச்செய்தி அலுவலகத்தில் ஃப்ரிலென்ஸர் ஒவியராக பணிபுரிகிறார்.அதே அலுவலகத்தில் கம்ப்யூட்டர் செக்ஷ்னில் பணிபுரியும் ஜீவிதா என்ற பெண்ணிற்கு அவரின் ஒவியங்கள் , கவிதைகள் பிடித்திருக்கிறது. அவரை சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். அங்கே தான் கதிரவனின் பதற்றம் ஆரம்பமாகிறது. சந்திப்பதில் ஏற்படுக்கூடும் கூச்சமும் வெட்கமும் காரணமாக சந்திப்பை தவிர்க்கிறார். பிறகு சந்தித்திருக்கலாமோ என்று கவலைப்படுகிறார். குடிக்கிறார். சீகரெட் பிடிக்கிறார்.கடற்கரையில் போய் உட்கார்ந்து கொள்கிறார். பின்பு சிலநாள் கழித்து தைரியத்தை வரவழைத்து கொண்டு ஒரு ஜனசந்தடி அற்ற டெலிபோன் பூத்திற்கு சென்று பேசிகிறார்.கடைசியில் பேசியும் விடுகிறார். அவளுக்கு ரோஜா ஒன்றை தருகிறார். அதை அவள் ஏற்றும் கொள்கிறாள். அவள் அவரை காதிலிப்பதாக அவர் நினைக்கிறார். இதற்கிடையில் அவள் அலுவலகம் வருவது நின்று விடுகிறது. விசாரிக்கையில் அவளின் சம்பளமும் அவள் மேல் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவள் என்பதும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவளை காதிலிப்பது பைத்தியாகாரத்தனம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கதிரவன் தொலைபேசியில் முயற்சித்தபடியே இருக்கிறார். பேசுகிறார். தன் விருப்பத்தை சொல்கிறார்.அவள் தான் அப்படி நினைக்கவில்லையே என்று மறுப்பு தெரிவிக்கிறாள். மறுநாள் ஒருவன் அவரை அழைத்து பேசுகிறான். அடிக்கவும் செய்கிறான். அவமானத்தால் ஊரை விட்டு போய்விடலாம் என்று நினைக்கும் போது மறுபடியும் அவளுக்கு தொலைபேசுகிறார். அவள் நாளை அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று பொய் சொல்கிறாள். அவளுக்காக தான் எழுதிய எல்லா கவிதைகளையும் ஒன்றாக்கி ஒரு காகித உறையில் சில ரோஜா இதழ்களை சேர்த்து அடுத்த நாள் அலுவலகத்திற்கு எடுத்து செல்கிறார். அவள் வரவில்லை.அவள் அமெரிக்கா சென்று விடுகிறாள். அதை அறிந்து தொடர்ந்து அவளுக்கு ஒரு வருடமாக வாழ்த்து அட்டைகளையும் , தான் வரைந்த ஒவியங்களையும் ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியபடியே இருக்கிறார். அவளின் எதிர்கால வாழ்க்கைகான வாழ்த்துகளுடனும் கடிதத்தை முடிக்கிறார் கதிரவன். நாவலும் முடிகிறது.

இந்த புத்தகத்தை யூமா வாசுகி பாலகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.பாலகிருஷ்ணன் இரவுக் காவலராகவே நாவிலும் வருகிறார்.சூரியோதத்தை கண்டு பரவசம் அடைபவராக,தன் பனைமரத்திலிருந்த பச்சைக்கிளிகளுக்காக பனைமரத்தை விற்பதற்கு மணமில்லதாவராக , தோழரே என்று கதிரவனை விளிப்பவராக மிக அற்புதமான நுண்ணுணர்வு கொண்டவராக இருக்கிறார் பாலகிருஷ்ணன். தன் மகள் நஜ்மா இறந்து போனதில் மனம் பிறழ்ந்தவராக அவள் எங்கேனும் விளையாட சென்றிருப்பாள் என்று நினைத்து தேடியபடியே இருக்கும் சுலைமான் சேட், நாடோடி உருதுப் பாடகனான கான் முகம்மது ,அவனை வீட்டு நீங்காதிருக்கும் பெரிய சிம்னிவிளக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியும் , நாவலில் தொடர்ந்து வந்தபடியே இருக்கும் குழந்தைகள், அக்குழந்தைகளுக்கு படம் வரைந்து தந்தபடியே இருக்கும் கதிரவன் , அலுவலகத்தில் சக ஊழியராக வரும் சந்திரன் என்று மிகவும் கவித்துவமான குறும்கதாபாத்திரங்களும் இடங்களும் நாவல் முழுதும் வருகின்றன.குழந்தைகள் என்னும் போது கதிரவன் மிகந்த பரவசமும் குழந்தைமையும் கொண்டவராக இருக்கிறார். இலக்கியா வந்து அங்கிள் நீங்கள் என் பூவை திருடிவிட்டீர்களா என்று கேட்குமிடம் மிக அற்பதமான இடம்.

நாவலின் இறுதியில் ஒரு கிழவி தன் மகன் கொலைசெய்யப்பட்டதையும் இருந்த குடிசையை ஒடித்து போட்டதையும் சொல்லி புலம்பியபடியே ரயிலில் வருகிறாள்.அவளில் தன்னை கண்டுகொள்கிறார் கதிரவன். ஜீவிதா இல்லாமல் தானும் அந்தக் கிழவியை போல அநாதையாக்க பட்டதாக உணர்கிறார். பல இடங்களில் தன்னை மரணத்திவிட்ட ஒருவனைபோலவும் கொடும்பாவி போலவும் நினைத்துகொள்கிறார். எப்போதும் லெளகீகம் தான் வெல்கிறது என்று ஒரு வரி வருகிறது. மிக நல்ல வரி. கதிரவன் எல்லா வற்றையும் புரிந்து கொள்கிறார்.ஆனால் அவரால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. அதைப்போல ஜீவிதா தான் காதலிக்கவேயில்லை என்றும் அமெரிக்கா செல்லும் அன்று அலுவலகம் வருவதாக பொய் சொன்னதை நினைத்து நீங்கள் சிறுபெண் என்று சொல்கிறார்.அதுவும் மிக நல்லதொரு இடம். மிகவும் மெண்மையானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். புதிய கூண்டு கதையில் மூத்த சகோதரனை மிகவும் மெண்மையானவனாக காண்பிக்கும் புதுமைப்பித்தன் அவனே காதல் வயப்படுபவனாகவும் மதமாறுபவனாகவும் வருவதை காட்டுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் தான் வெட்கமும் கூச்சமும் உடையவரகளாக இருக்கிறார்கள்.அவர்களே பெரும்பாலும் காதல் வயப்படவும் செய்கிறார்கள்.அவர்களே தங்களை வதைத்தும் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவரை பற்றிய தன்னிலை விளக்கமே மஞ்சள் வெயில்.யூமா வாசுகி கவிஞராக இருப்பது அவருக்கு இந்த நாவலை எளிதில் எழுத உதவியிருக்கக்கூடும்.வராந்தாவில் படரும் மஞ்சள் வெயில் தனிமையின் படிமம்.எல்லாவற்றாலும் தனிமையில் விடப்பட்ட தனிமையின் படிமம்.

மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி - அகல் வெளியீடு.



புதுமைப்பித்தன்



புதுமைப்பித்தன் சிறுகதைகளை வாசிக்கும் போது அதிலுள்ள உயிர்த்துடிப்பு நம்மை மிகவும் பரவசமடைய வைக்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அதை நம்பிக்கை வரட்சி என்ற சட்டகத்துக்குள் நாம் கொண்டு வரலாம். பாரதி கோபலயங்காருக்கும் ஒரு இடையர் பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை ஒரு லட்சியவாதத் தண்மையோடு முன்வைக்கையில் அதற்கு இரண்டாம் பாகம் எழுதுகிறார் புதுமைப்பித்தன். அப்படி லட்சியவாதத்தோடு நடந்த திருமணம் எப்படி இருக்கிறது என்கிற போது அதில் வரும் தினசரி உணவு பிரச்சனையை பேசுகிறார். லட்சியவாதம் என்று எழுதிவிடலாம்.ஆனால் அதை வாழும் போது ஏற்படும் தினசரி பிரச்சனைகள் புதுமைப்பித்தனின் அக்கறைகள் இருக்கின்றன. அவர் பலதரப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். டாக்டர் சம்பத், நானே கொண்றேன் , குற்றவாளி யார் போன்ற வெறும் துப்பறியும் கதைகள் எழுதியிருக்கிறார். கீழ் மத்தியத்தர வாழ்க்கையின் பிரச்சனைகள் என்று ஒரு நாள் கழிந்தது , வெளிப்பூச்சு, சுப்பையா பிள்ளையின் காதல்கள் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் பாடுகள் என்ற ரீதியில் வழி,கலியாணி, வாடா மல்லிகை, பாட்டியின் தீபாவளி,சாப விமோசனம் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். கொடுக்காபுளி மரம் , புதிய கூண்டு , நியாயம் , அவதாரம் போன்றவை கிறுஸ்துவ மதத்தை சார்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் என்றும் சொல்லலாம்.அப்படியென்றால் அவர் ஹிந்து மத்த்தை விமர்சனம் செய்யவில்லையா என்றால் அப்படியல்ல.அவர் ஒரு மதமாற்றத்திற்கு புதிய கூண்டு என்று தான் பெயர் வைக்கிறார்.பழையது ஹிந்து மதம் என்றால் புதியது கிறுஸ்துவ மதம் என்கிற ரீதியில். பொன்னகரம், கவுந்தனும் காமனும்,மகாமசானம் போன்ற நகரத்தின் இருண்ட பக்கங்களை பற்றிய கதைகளையும் எழுதியிருக்கிறார். மனிதன் தன்னை ஒரு இயந்திரம் போல தினசரி வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்பவன் , அதிலிருந்து அவன் வெளியில் வருவது அவனே நினைத்தாலும் இயலாது. மனித யந்திரம் , இது மிஷின் யுகம் ! அது போன்ற கதைகள். புதுமைப்பித்தன் தொடர்ந்து ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கிறார். கருத்துதளத்தில் நீங்கள் பேசும் விஷயங்கள் எல்லாம் யதார்த்த தளத்தில் என்னவாக இருக்கின்றன என்று பாருங்கள்ளய்யா என்கிறார். இந்த கேள்வியை நீங்கள் ஜே.ஜே.சில குறிப்புகளிலும் பார்க்க முடியும்.இவருடைய கதைகளில் பரஸ்பர அன்பு ஒரு மனிதர் மீது மற்றொரு மனிதர் செலுத்தக்கூடியதாக வருகிறதென்றால் அது கணவன் மனைவி உறவே. செல்லம்மாள் , பொய்க் குதிரை , ஒரு நாள் கழிந்தது,உணர்ச்சியின் அடிமைகள் போன்ற கதைகளில் அன்பு , உறவில் ஒரு மலர்ச்சி இருப்பதை பார்க்க முடியும். பரஸ்பர அன்பு உருவாக முடியாமல் கணவன் மனைவி தனித்தனி உலகங்களில் வாழும் இரண்டு உலகங்கள் கதையையும் எழுதியிருக்கிறார். எதிர்மறையாக பால்வண்ணம் பிள்ளை கதையில் ஒரு ஆண் தன் அதிகாரத்தை குடும்பத்தில் எப்படி செலுத்துகிறான் என்பதையும் எழுதுகிறார். காந்தியை பற்றி , பெரியாரை பற்றி புதுமைப்பித்தன் என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை புதிய நந்தன் கதையில் நாம் பார்க்கலாம். இரண்டு போக்குகளையும் ஒரளவுக்கு ஆரோக்கியத்தோடே அவர் பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. மனிதனின் நண்மை குணங்கள் மீது அவருக்கு பெரிய அபிப்பிராயம் இல்லை தான் என்றாலும் சங்குத்தேவனின் தர்ம்ம் போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய ஹாஸ்ய கதை என்றால் அது திருக்குறள் செய்த திருக்கூத்து. ஆற்றங்கரைப் பிள்ளையார் கதையில் பிள்ளையார் என்பது மனிதன் என்பதன் குறியீடு. அதுவும் இந்திய பிரஜை என்பது முக்கியம்.அவனை சமன , புத்த, இஸ்லாமிய, சங்கர, ராமானுஜ, மாதவச்சாரிய தத்துவங்கள் , கிறுஸ்வ மதங்கள் போட்டு துன்புறுத்துகிறது என்று எழுதுகிறார். இதில் பிள்ளையார் என்பது மனிதன் என்பது போல ஆறு என்பது காலத்தின் குறியீடாக வருகிறது. ஒப்பந்தம் என்கிற கதையில் ஒரு வாசகனின் கற்பனைக்கு என்று அவர் எதையும் விட்டுவைக்கவில்லை.வரதட்சனை பற்றிய மிக தீவரமான விமர்சனத்தை முன்வைக்கும் கதை அது. கோபல்லயங்காரின் மனைவி போல தனி ஒருவனுக்கு என்ற கதையில் தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி எழுதியதற்கு ஒரு எதிர்வினை போலவே தனி ஒருவன் உணவில்லாமல் இறந்து விடுவதும் , அதன்பின் பாரதி பாடலை தாங்கள் கேட்டு ரசிப்பதையும் பதிவு செய்கிறார். தெரு விளக்கு என்று ஒரு கதை .ஒரு கிழவனையும் ஒரு தெரு விளக்கையும் பற்றியது. கிழவனுக்கு என்று இருந்த தெரு விளக்கு உடைந்து போகிறது. ஒரே இருள். அடுத்த நாள் கிழவன் இறந்து போகிறான். இவ்வளவுதான் கதை. ரா.ஸ்ரீ.தேசிகன் இதற்கு விளக்கம் எழுதுகையில் வாழ்க்கையில் இருளில் விடப்பட்ட அனாதைகள் பற்றிய கதை என்று எழுதுகிறார். இப்படியொரு வாசிப்பு எனக்கு எப்போது சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. சாப விமோசனம் , தனி ஒருவனுக்கு, கோபாலயங்ங்காரின் மனைவி,நன்மை பயக்குமெனின்,அகல்யை போன்ற கதைகள் அவரின் வாசிப்பின் மீது சமூக யதார்த்த்த்தில் நின்று செய்யும் எதிர்வினை என்றும் கொள்ளலாம.சிற்பியின் நரகம் கதை பைலார்க்ஸ் சாத்தனிடம் அதற்கு நீ இந்த சிலையை போட்டு உடைக்கலாம் என்று சொல்வது போல இறுதியில் சாத்தன் கானும் கனவில் முடிகிறது.கனவில் அவன் சிலையை போட்டு உடைக்கிறான்.காஞ்சனை போன்ற சில அமானுஷ்ய தன்மையிலான கதைகளையும் எழுதியிருக்கார். சட்டென்று தினசரி வாழ்வை விட்டு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் கதாபாத்திரங்களை கொண்ட உபசேதம், சித்தி, அவதாரம்,ஞானக்குகை போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார்.மிகவும் சாதாரண மனிதர்கள் அதிகார பீடங்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் என்கிற ரீதியில் மனக்குகை ஒவியங்கள், காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் , வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகள் வருகின்றன.ஒரு வகையில் அவரின் கதைகளை தொகுத்து பார்க்கும் தளத்தில் தான் இவற்றை மேலே தொகுத்திருக்கிறேன். மற்றபடி ஒவ்வொரு கதையையும் பற்றி தனித்தனியே பலரும் எழுதியிருக்கிறார்கள்.

நாம் விரும்பும் இஷ்ட லோகத்திற்கும் , துஷ்ட லோகத்திற்குமான (தற்போதைய நிலைமை) ஒரு முரணியக்கம் தான் படைப்பு என்று ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதியிருப்பார். புதுமைப்பித்தனுக்கும் ஒரு இஷ்ட லோகம் உண்டு. ஆனால் அவர் லட்சியவாதி அல்ல. இஷ்டலோகம் என்பதெல்லாம் சரி.தற்போதைய நிலைமை இப்படித்தானே இருக்கிறது. மனிதன் இப்படித்தானே இருக்கிறான் என்று வினவுகிறார். நிறைய புத்தகம் படிக்கும் ஒருவர். தான் செய்யும் ஆராய்ச்சிக்காக ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து பக்கத்து வீட்டு நண்பரின் மகனை எடுத்து வரச்செய்கிறார்.பின்பு அது தொலைந்து போய்விட்டது என்று பொய் சொல்ல சொல்கிறார்.இந்த கதைக்கு அவர் தரும் தலைப்பு நன்மை பயக்குமெனின். பொய்மையும் வாய்மை இடத்த நன்மை பயக்குமெனின் என்பதை கிண்டல் செய்கிறார். இவர் அநேகமாக எல்லாவற்றையும் கிண்டலும் கேலியும் செய்கிறார். அதன் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்.புத்தகம் வாசிப்பது , ஆராய்ச்சி செய்வது அறிவு அபிவிருத்திக்காக என்கிற போது இந்த பொய்யின் மூலம் அப்படி புத்தகம் வாசித்து என்ன அவர் அறிவு அபிவிருத்தி கண்டுவிட்டார் என்று அவர் கேள்வி எழுப்புகிறார் என்றும் கொள்ளலாம். கிண்டலும் , கேலியும் இருந்தாலும் அதற்கு பின்னால் அவருக்கு மனிதர்கள் மீது அன்பு இருக்கிறது. அதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். இப்படி இருக்கிறதே என்று தான் அவர் ஆதங்கப்படுகிறார்.அந்த ஆதங்கம் தான் கிண்டலாகவும் , கேலியாகவும்,விமர்சனமாகவும் வெளி வருகிறது.இதை உணர்ந்து விட்டால் நாம் புதுமைப்பித்தனோடு எளிதாக உரையாடலாம். அவர் கரங்களை பற்றிக்கொண்டு அவருடைய ஆதங்கத்தில் நாமும் பங்கு கொள்ளலாம்.