ஒரு ஊரின் கதை



எம்.வி.வாசுதேவ ராவ்
                                                         


அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் கொடியேற்றம்.அதில் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் கோபி சிறிது சிறிதாக ஒரு பொறுப்புள்ள மனிதராக மாறுகிறார்.ஒக ஊரி கதா என்ற மிருனாள் சென் திரைப்படத்திலும் ஒரு கிராமம் வருகிறது. அதில் ஒரு இளைஞன் வருகிறான்.அவனுக்கு திருமணம் நடக்கிறது.அவள் கர்ப்பவதி ஆகிறாள்.இறந்தும் போகிறாள்.அவன் கடைசி வரை பொறுப்புள்ள இளைஞனாக மாறவில்லை. அந்த இளைஞனின் தந்தையாக நடித்தவர் எம்.வி.வாசுதேவ ராவ்.அற்புதமான நடிகர்.நாயகன் படத்தில் ஹூசைன் பாயாக நடித்திருப்பார்.படம் நெடிகிலும் அவர் தன் மகனிடம் சொல்வது இதுதான்.திருமணம் செய்து கொள்ளாதே.நம் நிலையில் அது சரியான முடிவு இல்லை என்பார்.வேலைக்கு சென்றால் அது உன்னை விழுங்கிவிடும்.அதன் பிறகு நீ வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.தப்பிக்க வாய்ப்பே இல்லை.ஆனால் மகன் ஆசைப்படுகிறான்.திருமணம் செய்து கொள்கிறான்.தந்தைக்கு வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை.அந்த ஊர் முழுவதும் அந்த ஊரின் நிலப்பிரபுவின் கட்டளைக்கு கட்டுப்பட்டது.அந்த நிலப்பிரபு அந்த கிராமத்தில் தனக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்வார்.ஒரு முறை தங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்பதற்காக அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் இருக்கும் ஆடுகளை நிலப்பிரபுவின் ஆட்கள் அந்த பெண் எவ்வளவு மன்றாடியும் இழுத்து செல்வார்கள்.அப்போது வாசுதேவ ராவ் சொல்வார், இவர்கள் எல்லாவற்றையும் எடுத்துகொள்வார்கள்.என் பாட்டானார் காலத்தில் அவருடைய நிலங்களை பிடுங்கிகொண்டார்கள்.என் தந்தை காலத்தில் வீட்டை பிடுங்கிகொண்டார்கள்.இனி ஒன்றும் இல்லை.கடுமையாக வேலை செய்து பெற்ற காசில் தனக்காக எதையாவது செய்துகொண்டால் அதையும் பிற்காலத்தில் அவர்கள் பிடுங்கிக்கொள்ளலாம்.அதனால் அவர் வேலை செய்வது இல்லை.மகனையும் வேலை செய்ய அனுமதிப்பதில்லை.அவ்வவ்போது குடித்துவிட்டு பாடுவார்.நாம் வேலை செய்து வேலை செய்து சாகிறோம்.அவன் உழைப்பை பெற்று தின்று தின்று பருக்கிறான் என்று. வரும் பெண் ஆண்கள் இருவரும் வேலைக்கு செல்லாததால் அவள் செல்கிறாள்.அங்கே வேலை கொடுப்பதும் நிலப்பிரபுதான்.ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றால் நாலு ரூபாய் தான் கொடுப்பார்கள்.இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம்.தந்தையும் மகனும் செய்வதில்லை.குடிப்பார்கள்.திருடுவார்கள்.தூங்குவார்கள்.காலம் கழிப்பார்கள்.வந்த பெண்ணிற்கு பிரசவத்தின் போது சிக்கலாகிவிடவே மருத்துவச்சியை அழைத்து வந்து பார்க்க சொல்வார்கள் கிராமத்து ஆட்கள்.ஆனால் இவர்களிடம் பணம் இல்லை.அப்போது வாசுதேவ ராவ் மகனிடம் சொல்வார்.போ போய் தூங்கு .ஒன்றும் ஆகாது.காலையில் குழந்தை இறந்து பிறக்கலாம்.அல்லது நன்றாக பிறக்கலாம்.எனக்கு இதெல்லாம் பழகிவிட்டது.எனக்கு நிறைய குழந்தைகள் பிறந்தன.சில குழந்தைகள் இறந்து பிறந்தன.சில பிறந்து சில நாட்கள் கழித்து இறந்தன.நான் கொண்டு போய் ஈடுகாட்டில் புதைத்துவிட்டு வருவேன்.போ போய் தூங்கு என்பார்.இருவரும் தூங்குவார்கள்.காலையில் சென்று பார்த்தால் இல்லாள் இறந்து கிடப்பாள்.அவளுக்கு இறுதி சடங்கு செய்ய அவளுக்கு புடவை வாங்க வேண்டும். அதற்கு காசு வேண்டும்.அதற்கு நிலப்பிரபுவிடம், அந்த ஊரின் பெரிய மனிதர்களிடம் சென்று பிச்சை கேட்பார்கள்.நிறைய சில்லறைகள் கிடைக்கும்.ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு வாங்கிய காசையெல்லாம் இரு கைகளாலும் இறுக பற்றியபடி வாசுதேவ ராவ் கடவுளிடம் வேண்டுவார்.எப்போதும் எங்களுக்கு இதுபோல கைநிறைய காசு கொடு.வாழ நல்ல வீடு கொடு.இறந்து போன பெண்னை திருப்பிக்கொடு. கொடு.கொடு.எல்லாம் கொடு.வாசுதேவ ராவுக்கும் அவரது மகனுக்கும் படம் முழுவதும் ஒரே உடைதான்.வாசுதேவ ராவ் கீழ்பாச்சி வேஷ்டி கட்டியிருப்பார்.அது ஒரு மாதிரி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கொடியேற்றம் ஒரு Coming of age படம்.ஒக ஊரி கதா ஒரு காலகட்டத்தின் சமூக அவலத்தை முன்வைத்த படம்.நக்சல்பாரி அமைப்புகள் முளைப்பதற்கான காரணங்களை முன்வைத்த படம்.மிருனாள் சென்னுக்கு முன் அடூர் கோபாலகிருஷ்ணனும் சத்யஜித்ரேவும் பின் நகர்கிறார்கள்.மிருனாள் சென் மிக சிறந்த சிந்தனையாளர். அவரைவிட ஜி.அரவிந்தன்.ஏனேனில் அவர் சிந்தனையாளர் மட்டுமல்ல.குழுந்தைமையின் நிஷ்களங்கமும் கொண்டவர்.அந்த கண்கள் அரவிந்தனிடம் இருந்திருக்கின்றன.அந்த நிஷ்களங்கத்தை வேறு சொல்லால் அழைக்க வேண்டும் என்றால் அது ஆன்மிகம்.

No comments: