தன்னுணர்வு


                              

தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்கள் இதுவரை நான் வாசித்ததில் இரட்டை (The Double) வாசிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது.கரமசோவ் சகோதரர்கள் ஆயிரம் பக்க நாவல் என்றாலும் அது அவ்வளவு கடினமாக இல்லை.நூற்றியெழுபது பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நாவல் மிகவும் சலிப்பேற்றுவதாக இருந்தது.அவருடைய நாவல்களில் சில கதாபாத்திரங்களை குரூர நகைச்சுவையோடு விவரிப்பார்.ஒரளவுக்கு குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் மர்மலதேவை சொல்லலாம்.இந்த இரட்டை நாவலில் வரும் கொல்யாட்கின் (Golyadkin) கதாபாத்திரத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை குரூர நகைச்சுவை மூலமே சித்தரிக்கிறார்.நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் இல்லை.இது முழுக்க கொல்யாட்கினின் வீழ்ச்சியை பேசும் ஒரு நாவலாகவே வருகிறது.நகரத்தின் முக்கிய மனிதர் ஒருவரின் விருந்து நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளியாக செல்லும் கொல்யாட்கின் அங்கிருந்து வேலையாட்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறார்.அந்த அவமானத்தில் இரவில் பாலத்தில் நின்று அழுதுகொண்டிருப்பவர் அங்கே தன்னை போன்ற உருவம் கொண்ட ஒருவரை சந்திக்கிறார்.இந்த விருந்து நிகழ்வில் கலந்துகொள்ளும் அதே நாள் அவர் ஒரு மருத்துவரை சந்திக்கிறார்.அவர் சில மருந்துகளை பரிந்துரைக்கிறார்.மேலும் தனிமையில் இருக்காமல் ஒரு சமூக மனிதனாக மாற்றிக்கொள்வது அவருக்கு நிறைய உதவும் என்கிறார்.கொல்யாட்கின் அதை மறுக்கிறார்.மேலும் தான் தனிமையையும் அமைதியையுமே விரும்புவதாகவும் தன்னால் தன்னை மாற்றிக்கொள்வது இயலாது என்றும் கூறுகிறார்.தன்னை போல உருவம் கொண்டவரை உண்மையிலே பார்த்தோமா அல்லது கற்பனையா என்று இவருக்கு புரியவில்லை.அடுத்தநாள் அலுவலகம் சென்றால் பாலத்தில் இரவில் பார்த்தவர் அங்கே புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.ஜூனியர் கொல்யாட்கின் அலுவலகத்தில் முக்கியத்துவம் அடைகிறார்.சமூகத்திலும் அவர் முக்கியத்துவம் அடைகிறார்.தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாக நினைக்கும் சீனியர் கொல்யாட்கின் இதற்கு எதிராக தன்னால் முடிந்தவரை போராடுகிறார்.ஜூனியர் கொல்யாட்கினிடம் மன்றாடுகிறார்.கடைசியில் நாவல் ஆரம்பத்தில் இருந்த விருந்து நிகழ்வு போல இறுதியிலும் ஒரு விருந்து நிகழ்வு நடக்கிறது.அங்கே செல்லும் சீனியர் கொல்யாட்கின் மருத்துவரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.அவருடைய வேலையும் போகிறது.அவர் அந்த மருத்துவரின் கண்கானிப்பில் ஒரு அறையை வாடகை எடுத்து வாழவேண்டும் என்று அந்த மருத்துவரால் கட்டளையிடப்படுகிறார்.


இதில் முக்கிய விஷயம் ஒரு விருந்து நிகழ்விலிருந்து வெளியேற்றப்படும் கொல்யாட்கின் மிகுந்த அவமானம் கொள்கிறார்.அதன் பின்னான நாவல் முழுவதும் அவருடைய வீழ்ச்சி பற்றியது தான்.ஆனால் அந்த வீழ்ச்சியை தஸ்தாவெய்ஸ்கி குரூர நகைச்சுவையோடு விவரித்திருக்கிறார்.இங்கே ஜூனியராக வருபவர் உண்மையிலேயே அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாரா அல்லது அது சீனியரின் விருப்ப கற்பனையா என்பது நாவலில் தெளிவாக சொல்லப்படவில்லை.அது ஒரு மனப்பிறழ்வு நோயாக இருக்கலாம்.அல்லது உண்மையில் அப்படி ஒருவர் இருந்திருக்கலாம்.தஸ்தாவெய்ஸ்கியின் வேறு சில நாவல்களில் இது போன்ற விஷயங்களை பார்க்க முடியும்.குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் குறும்கதாபாத்திரம் ஸ்விட்ரிகைலோவ் ரஸ்கோல்நிகோவை புரிந்துகொள்ள உதவும் ஒரு கதாபாத்திரம்.அது ரஸ்கோல்நிகோவின் கீழ்மையை புரிந்துகொள்ள உதவுகிறது.அதுபோல கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் இவான் கரமசோவ் ஒரிடத்தில் சாத்தானுடன் உரையாடும் ஒரு நிகழ்வு வருகிறது.அந்த சாத்தான் இவான் தன் அறிவின் துணையால் அடையும் கீழ்மையை ,அவதியை குறிப்பதாக இருக்கலாம்.அதே போல இந்த கதையில் வரும் மற்றொரு கொல்யாட்கின் நிஜ கொல்யாட்கின் உவகை கொள்ளும் பிம்பம் அல்ல.அவன் தன்னில் முழுமையாக வெறுக்கும் ஒரு பிம்பமாக வருகிறான்.பொது இடங்களுக்கு செல்வது, அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்து பணியில் உயர்வது, சமூகத்தில் நன்மதிப்போடு இருப்பது ஆகியவை இயல்பாகவே கொல்யாட்கினுக்கு உவப்பாக இல்லை.நாவலின் ஆரம்பித்தில் மருத்துவரிடம் பேசும் போது தன்னுடைய எதிரிகள் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று சொல்கிறார். பிறருக்கு தீங்கியிழைக்கும் வகையில் தனக்கு எதையும் திட்டமிட்டு செய்ய தெரியாது என்றும் சொல்கிறார்.கொல்யாட்கின் லெளகீகமானவர் இல்லை.அவரால் அதை செய்யவும் இயலவில்லை.தன்னை வருத்தி அப்படி அவர் செய்ய விரும்புவதின் ஒரு விருப்ப கதாபாத்திரமே மற்றொரு கொல்யாட்கினாக இருக்கலாம்.அல்லது அதுவே அவர் ஆக விரும்பும் கதாபாத்திரமாகவும் இருக்கலாம்.ஆனால் முதலாவதுதான் சரி என்று படுகிறது.பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் முக்கிய பிரமுகரின் மகள் அவரை அன்றிரவு வந்து அழைத்து போக சொல்கிறாள்.அப்படியான ஒரு கடிதத்தை அவர் வாசிக்கிறார்.அதுவும் அவரது கற்பனையாக இருக்கலாம்.ஆனால் அவர் அவளது வீட்டருகில் இரவில் நின்றுகொண்டு தனக்குத்தானே பேசிக்கொள்ளும் போது நான் இவ்வாறு நடந்து கொண்டால் எனக்கு வேலை போய்விடும்.மேலும் வேறு வேலையும் கிடைக்காது.எனக்கு பெண்களை புகழ்ந்து பேச தெரியாது.மேலும் என் முகமும் அவ்வளவு அழகாக இல்லை.எனக்கு இதில் எல்லாம் எந்த விருப்பமும் இல்லை என்று சொல்பவர் சட்டென்று அந்த இடத்தைவிட்டு ஒட ஆரம்பிக்கிறார்.அந்த வகையில் பார்த்தால் அவரால் ஒரு லெளகீகமான ஒரு மனிதராக இருக்க முடியவில்லை.ஆனால் அந்த மன அழுத்தம் தரும் பிறழ்வால் மற்றொரு கொல்யாட்கினை அவர் பார்க்கிறார்.இறுதியில் அவர் நினைத்து போலவே அவருடைய வேலை பறிக்கப்பட்டு ஒரு மருத்துவரின் கண்கானிப்பில் ஒரு தனி அறையில் வாழ அவர் ஆணையிடப்படுகிறார் என்பதோடு நாவல் முடிகிறது.தஸ்தாவெய்ஸ்கி இந்த குறுநாவலை எழுதியபின் மிகுந்த பரவசம் அடைகிறார்.ஏனேனில் அவருடைய பிற்கால நாவல்களான குற்றமும் தண்டனையும் , கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நாவல்களில் அவர் இந்த உத்தியை கையாள்கிறார்.அதன் முதல் பொறி அவருக்கு இந்த நாவலில் தான் கிடைக்கிறது.தஸ்தாவெய்ஸ்கியின் இந்த நாவல் பற்றி தமிழில் யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.இந்த நாவலை ஆய்வுக்கு உட்படுத்தி மிக பெரிதாக எழுதலாம்.    

அக்கறை






என்னுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்த ஒருவருக்கு விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தது.அவர் தன் துணைவியாருடன் சேர்ந்து வாழ நிறைய விரும்பினார்.ஆனால் அவரது துணைவியாருக்கு அதில் எந்த விருப்பமும் இருந்ததாக தெரியவில்லை.ஒரு கட்டத்தில் என் நண்பர் மனச்சோர்வு காரணமாக தூக்கம் வராமல் அவதிப்பட்டார்.அதன் காரணமாக மனநல மருத்துவரிடம் சென்றார்.அவர் சில Anti-Depressant மாத்திரை பரிந்துரைத்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் அதை உண்டால்தான் உறக்கம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.ஒரு கட்டத்தில் ஏதோ சில காரணங்களுக்காக என்னுடன் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பேச ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் எல்லா விஷயங்களையும் சொன்னார்.சில மாதங்களில் என்னிடம் அவர் எப்போதும் புலம்ப ஆரம்பித்தார்.என் அனுபவம் சார்ந்து ,வாசிப்பு சார்ந்து ,எனக்கிருந்த புரிதல்கள் சார்ந்து அவருக்கு நான் சில ஆலோசனைகள் சொன்னேன்.மறுபடியும் ஒரு முறை அவருடைய துணைவியாருடன் பேச சொன்னேன்.அதுவும் சரிப்பட்டுவரவில்லை.பின்னர் அவர் என்னை முழுவதும் சார்ந்திருக்க ஆரம்பித்துவிட்டார்.பேசும் நேரங்களில் எல்லாம் அவருடைய பிரச்சனைகளை பற்றி, அவருடைய அவதி , கண்ணீர், தனிமை இதைப்பற்றியே பேசினார்.கிட்டத்தட்ட எட்டுமாதங்கள்.என்னுடனே என் இல்லத்துக்கு வருவார்.மாலை முழுவதுமிருந்து என்னுடன் உணவருந்திவிட்டு செல்வார்.முழுவதும் அவருடைய புலம்பல் தான்.ஒரு கட்டத்தில் நான் நினைத்திருந்தால் அவரிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எனக்காக செலவு செய்ய வைத்திருக்க முடியும் என்ற நிலைமையில் இருந்தார்.என்னுடைய எல்லா வேலைகளையும் செய்யும் ஒரு வேலைக்காரரை போல அவரை நடத்தியிருக்க கூடிய அளவில் பலவீனமாக இருந்தார்.அவருக்கு எவ்வளவு ஆலோசனை வழங்கினாலும் அவர் முதல் முறையாக என்னுடன் பேசிய போது என்ன புலம்பினாரோ அதையேதான் புலம்பிக்கொண்டிருந்தார்.ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து நிறைய கத்திவிட்டேன்.அதன் பின் அவருடன் அலுவலக வேலை சம்மந்தமாக மட்டும் பேச ஆரம்பித்தேன்.அவரும் தனிப்பட்ட உரையாடல்களை தவிர்த்தார்.


நான் ஒருவரை காதலித்தேன்.அவர் என்னை காதலிக்கவில்லை.அதை அவர் தெளிவாக சொல்லியும்விட்டார்.மேலும் அவருக்கு என்மீது அன்போ , அக்கறையோ இல்லவே இல்லை என்றும் தெளிவாக சொல்லிவிட்டார்.அந்த உறவு பின்னர் நட்பு என்ற அளவில் தொடர்ந்தது.என் விருப்பத்தால் தொடர்ந்தது என்று சொல்லலாம்.அவருக்கு பெரிய விருப்பமில்லை.ஒரு கட்டத்தில் நான் மேலே சொன்ன என் நண்பர் போல அவரிடம் புலம்ப ஆரம்பித்தேன்.புலம்புவது , பலவீனமான தருணங்களில் அவரை புண்படுத்துவது போல எழுதுவது என்று நிறைய இருந்தது.எல்லாம் நாகரீமானவை தான். நட்பு என்ற எல்லைக்குள் நின்று பேசக்கூடியவை தான்.அவருக்கு எழுதிய கடிதங்களை தொகுத்து பெயர் , சம்பவங்கள் போன்றவற்றை திருத்தினால் மஞ்சள் வெயில் போல ஒரு நாவல் தயாராகிவிடும்.அந்த அளவுக்கு நாகரீமானவை தான்.அச்சிடக்கூடியவைதான்.ஆனால் புலம்பல் புலம்பல்தானே.Nuisance is Nuisance.தொந்தரவு தான்.தவறுதான்.ஒரு கட்டத்தில் என் புலம்பலும் , புண்படுத்தும் பேச்சும் அவருக்கு அதீத மன அழுத்தம் தந்தது.அவரும் பொறுமையிழந்து கத்திவிட்டார்.நட்பு என்ற அளவில் நீடித்த அந்த உறவும் முடிந்துபோனது.

நமக்கு ஒரு இழப்பு, வீழ்ச்சி, மரணம், அவமானம், தோல்வி போன்ற தருணங்களில் நாம் மிகவும் பலவீனமாக நடந்துகொள்கிறாம். நம்மீது அன்பு கொண்ட சிலர் அந்த தருணங்களில் நமக்காக உதவ முற்படலாம்.பெற்றோர் , நண்பர்கள், துணை, பிள்ளைகள், உறவினர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பதே கேள்வி.முதலில் பலவீனமான தருணங்களில் நமது பிரச்சனைகளை செவிகொடுத்து கேட்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கிறது.அப்படியே நேரம் இருந்தாலும் அக்கறை செலுத்துவது அவ்வளவு எளிதல்ல.அக்கறை சமயங்களில் ஒரு ஆடம்பரம் போல ஆகிவிடுகிறது.நான் சொல்வது நெருங்கிய உறவுகளில் கூட.நான் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் மிகவும் பலவீனமாக இருந்தேன்.அப்போது ஒரு முறை வீட்டில் வெடித்து அழுதேன்.என் பெற்றோர் என்னை சமாதானப்படுத்தினர்.பிறகு சில நாள் கழித்து என் அன்னை நான் அவ்வளவு பலவீனமாக அழுதது எரிச்சல் தருவதாக இருந்தது என்றார்.அந்த அர்த்தத்தில் தான் சொன்னார்.ஆண்கள் அழக்கூடாது என்றும் அவர் சொன்னதாக ஞாபகம்.அப்போது நான் எதனால் பலவீனமாக இருந்தேன் என்பதை என்னால் பெற்றோருக்கு புரியவைக்க முடியவில்லை.நண்பர்களுக்கும் புரியவில்லை.என் பலவீனத்திலிருந்து நான் மீண்டதற்கு எனக்கு உதவியவர்கள் அசோகமித்திரனும் , நகுலனும், ஆல்பெர் காம்யூவும், தஸ்தாவெய்ஸ்கியும் தான்.அந்த வாசிப்பு மூலமாகத்தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து நான் எனது பலவீனங்களிலிருந்து மீண்டேன்..Life is Life everywhere என்று திமித்ரி சொல்வதும், எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே என்று மெர்சால்ட் சொல்வதும், எனது அடையாளங்கள் ஒன்றுமில்லை என்று சந்திரசேகரன் விடியகாலை பொழுதில் ஒடுவதும், நகுலனின் கவிதைகளுமே என்னை மீட்டன.வேறு யாராலும் என்னை காப்பாற்றி இருக்க முடியாது.அந்த பலவீனம் என்னை அப்படியே விழுங்கியிருக்கும்.உதவி செய்ய நினைப்பவர்கள் கூட ஒன்றும் செய்ய இயலாது.என் தாய் தந்தையருக்கு என்மீது நிறைய அன்பு இருக்கிறது.என்னுடைய பால்ய காலம் மிக சிறப்பாக இருந்தது.ஆனால் அவர்களாலேயே எனது பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை.நமது பிரச்சனைகள் அந்தரங்கமானவை.ஒரு போதும் அதை வேறொருவரால் தீர்க்க முடியாது.நீங்கள் நடுக்கடலில் தத்தளித்தாலும் உங்களை காப்பாற்ற எந்த கரமும் வராது.நீங்களாக முயற்சி செய்து கரைக்கு வரவேண்டும்.வேறு வழியே இல்லை.உறவுகள், நட்பு , பெற்றோர், சகோதரர்கள், துணைவர்,பிள்ளைகள் எல்லாரும் ஒரு எல்லை வரைதான்.நாம் எல்லோரும் அந்தரங்கமாக தனியானவர்கள் தான்.என் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.அவருக்கு எழுபது வயது.அவருடைய துணைவியார், பிள்ளைகள் உட்பட யாரும் வருத்தப்படவில்லை.அவர் எப்போதும் மற்றவர்களை புண்படுத்தும்படியே பேசக்கூடியவர்.அவரது மரணத்தை எல்லோரும் விரும்பினார்கள் என்று தான் தோன்றுகிறது.அநேகமாக எல்லா உறவுகளிலும் எதிர்பார்ப்பின்மை, சாராது இருத்தல், நமது பிரச்சனைகளை பற்றி பேசாமல் இருப்பது , மற்றவருக்கான வெளியையும் , சுதந்திரத்தையும் அளிக்கும் பண்பு ஆகியவை இருந்தால் ஒரளவு அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.உறவுகளால் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.திருமணமாகி பெற்றோர் , பிள்ளைகளுடன் இருக்கும் சிலருடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களின் தனிமை சட்டென்று புலப்படுகிறது.என்னுடைய நண்பருக்கு உதவ வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.ஆனால் அது சாத்தியமில்லை.அவரை அவர் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.நம்மால் மிக சில ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும்.இது தான் யதார்த்தம்.நீங்கள் மற்றவர் மீது சாய்ந்தால் ஒன்று அவர் உங்களை சுரண்டிக்கொள்ள சாத்தியம் இருக்கிறது.அல்லது சற்று நல்லவராக இருந்தால் விலகிசென்றுவிடுவார்.அப்படியும் ஒரு உறவு நீடிக்கிறதென்றால் தினசரி வாழ்க்கை சார்ந்து ஒருவரை ஒருவரை சார்ந்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.நான் என் கல்லூரி காலத்திலிருந்தே ஒரு உறவில் இருவருமே ஒருவரை ஒருவர் புண்படுத்தாமல் , அகங்காரம் சிறிதும் இல்லாமல், மிக அந்தரங்கமான ஒரு அன்புடன் இருக்க முடியுமா என்று நினைத்திருக்கிறேன்.நிச்சயம் சாத்தியமில்லை.ஆக, எந்த இடத்திலும் பிறர் உங்களுக்காக அக்கறை பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட பைத்தியக்காரத்தனமானது.உங்கள் பிரச்சனைகளை பல்லை கடித்துக்கொண்டு நீங்களே சமாளித்து சற்று பலம் பொருந்தியவர் போல நின்றுகொண்டிருந்தால் உங்களை சுற்றி உறவுகளும் நட்பும் இருக்கும்.நீடிக்கும்.அவ்வப்போது பேசிக்கொள்ளலாம்.மகிழ்ச்சியை சிரித்து பகிர்ந்து கொள்ளலாம்.ஒரு நல்ல ஆராக்கியமான எளிய அன்பு சாத்தியம்.அவ்வளவுதான். உறவுகள் இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை தான்.ஆனால் இருந்துவிட்டு போகட்டுமே.

   

நீதிபதி சந்துரு


                                                            


இந்த மாத காலச்சுவடு இதழில் நீதிபதி சந்துருவின் நேர்காணல் வந்துள்ளது.மிக சிறப்பான நேர்காணல்.1951யில் சந்துரு பிறக்கிறார்.1955யில் அவருடைய தாயார் இறக்கிறார்.1966யில் அவருடைய தந்தை இறந்து போகிறார்.சகோதரர்களில் மூத்தவர் பொறியியல் படிக்க அமெரிக்கா செல்கிறார்.இரண்டாம் சகோதரர் கான்பூர் ஐஐடியில் சென்று படிக்கிறார்.தந்தை இறந்துவிடவே இவர் விடுதியில் சேர்ந்துவிடுகிறார்.தம்பியை அவர்களுடைய மூத்த சகோதரி வாழும் மாயவரத்தில் அவருடைய பொறுப்பில் விடுதியில் சேர்த்துவிடுகிறார்கள்.தி.நகரில் ராமகிருஷ்ணா பள்ளயில் படிக்கிறார்.இந்த இடத்தில் அசோகமித்திரன் கேணி கூட்டத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது.அப்போது பள்ளிகளில் மிக சுமாரான கட்டணத்தில் தரமான கல்வி மாணவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது.அசோகமித்திரனின் பிள்ளைகளும் தி.நகர் ராமகிருஷ்ணா மிஷனில்தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன்.பின்னர் சில காலம் லயோலாவில் படிக்கிறார்.அங்கே படிக்கும் போது இந்து இதழில் கல்லூரியின் விடுதி குறித்த ஒரு கட்டுரை எழுதவே கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார்.பல்வேறு போரட்டங்களில் கலந்துகொள்கிறார்.சி.பி.எம் கட்சியில் சேர்கிறார்.இதற்கிடையே என்.ராம் மூலமாக தாம்பரம் எம்.சி.சி கல்லூரியில் சேர்கிறார்.அங்கே இருக்கும் போது எம்.ஆர்.எஃப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்கிறார்.டிகிரி முடித்தபின் மேற்கொண்டு படிக்காமல் 71யிலிருந்து 73வரை கட்சிபணியில் இருக்கிறார்.தமிழகம் முழுவதும் பயணிக்கிறார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஏற்பட்ட மோதலில் இறந்து போன உதயகுமாருக்காக விசாரணை கமிஷன் அமைக்க போராடுகிறார்.பின்னர் இறந்தது உதயகுமார் தான் என்பது விசாரணை கமிஷன் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.இப்படியே போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டு கொண்டிருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற புரிதலில் சட்டம் படிக்கிறார்.பின்னர் பல்வேறு மனித உரிமை வழக்குகளில் வாதாடுகிறார்.தன்னுடைய நாற்பதாவது வயதில் தன்னை ஒரு நேர்காணல் எடுக்க வந்தவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.1995யில் குழந்தை.மூத்த வழக்கறிஞர் ஆகிறார்.பின்னர் 2006யில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆகிறார்.சிறப்பாக பணியாற்றி ஒய்வுபெறுகிறார்.


இந்த நேர்காணலை படிக்கும் போது சில விஷயங்கள் முக்கியமாக பட்டன.அவருடைய பள்ளி வாழ்க்கை.தாயார் இறந்தபின் தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் ஐந்து குழந்தைகளையும் வளரத்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் வீட்டில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர்.அவருடைய 15வயதில் தந்தையின் மரணம்.பின்னர் விடுதி வாழ்க்கை.இவருடைய சகோதரர்கள் எல்லோரும் நன்றாக படித்திருக்கிறார்கள்.மிக குறைவான கட்டணத்தில் தரமான கல்வி தரப்பட்டிருக்கிறது.எனக்கு மிகவும் முக்கியமான பட்டது இவருடைய 71யிலிருந்து 73வரையான வாழ்க்கை.இன்று நாம் பெரும்பாலும் பள்ளி அதன் பின் கல்லூரி அதன் பின் வேலை என்று இருக்கிறோம்.இதில் சமூகம் குறித்த புரிதலே நமக்கு ஏற்படுவதில்லை.பள்ளி, கல்லூரி,வேலை இவைகளுக்கு இடையே இடைவெளிகளே இல்லை.அப்படி ஒரு இடைவெளிதான் சந்துருவின் வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது.அப்போது தான் அவர் தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறார்.அப்போது அவருக்கு சமூகம் குறித்த அழுத்தமான புரிதல் ஏற்பட்டிருக்கிறிது.அதுவே அவரை மனித உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக , சிறந்த நீதிபதியாக வாழ வைத்திருக்கிறது.அவர் சி.பி.எம் கட்சியில் இருந்தது அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய விஷயம் என்று நினைக்கிறேன்.எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் மார்க்சிய கல்விதான் ஒருவருக்கு சமூகம் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.அது தான் மேற்கட்டுமானம் , அடித்தளம் என்ற தர்க்க பிரிவை உருவாக்கி நாம் சமூகத்தில் எங்கே இருக்கிறோம் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது.காந்தியவாதிகளின் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சட்டென்று ஆன்மிகவாதிகளாகி விடுகிறார்கள்.இயற்கை விவசாயம் பேசும் நம்மாழ்வார் ஒரு ஆன்மிகவாதியை போலத்தான் பேசுகிறார்.இது ஏதோ ஒரு கட்டத்தில் முடங்கிவிடுகிறது.மார்க்சிய சிந்தனை சமூகம் குறித்த ஒரு புரிதலை பல விஷயங்களை அறிந்து கொள்ளும் ஒரு கருவியை நமக்கு அளிக்கிறது.அது எதை தருகிறதோ இல்லையோ இந்த சமூக அமைப்பை பற்றிய நல்ல புரிதலை தருகிறது.இன்றைய வழக்கிறஞர்களின் பிரச்சனை குறித்து சந்துரு பேசும் போது அவர்களுக்கு சமுதாய அமைப்பின் மீது எந்த பங்குமில்லை என்கிறார்.ஆக, அவருடைய பயணமும் ,மார்க்கஸிய கல்வியும் அவருக்கு ஒரு வலுவான கருத்தியல் தளத்தை அளித்திருக்கிறது.சில வருடங்களுக்கு முன் மறைந்த மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் கே.பாலகோபால் பற்றி படித்த போது இதே போன்ற மன எழுச்சியை அடைந்தேன்.அவரும் மார்க்ஸிய கல்வி கற்றவர்.இப்போது சந்துருவின் நேர்காணல் மிகுந்த மன எழுச்சியை தருவதாக இருக்கிறது.சி.பி.எம் குறித்து ஒரு விஷயம் எப்போதும் எரிச்சல் தருவதாக இருக்கிறது.அந்த கட்சி ஏன் இவ்வளவு இறுக்கமானதாக இருக்கிறது.கட்சிக்குள் ஏன் ஆரோக்கியமான உரையாடலே இல்லை.இலங்கை தமிழர் பிரச்சனையில் போராட்டங்களில் கலந்துகொண்டதால் சந்துரு கட்சி நடவடிக்கை காரணமாக நீக்கப்படுகிறார்.இன்று ஒரு இடதுசாரி தரப்பு என்பது சி.பி.எம் மாத்திரமே.பிரகாஷ் காரத் ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவணத்தின் CEO போல இருக்கிறார்.சி.பி.எம் வலுவான ஆரோக்கியமான இடதுசாரி தரப்பாக இருப்பது மக்களுக்கு முக்கிய விஷயம்.சி.பி.எம் கட்சியில் கருத்தியல் தளத்தில் சில மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.சந்துரு போன்ற உறுப்பினர்களை அது இழக்கக்கூடாது.காலச்சுவடுவில் சில நேர்காணல்கள் நன்றாக இருக்கிறது.தியோடர் பாஸ்கரனின் நேர்காணல் இப்போதும் நினைவில் இருக்கிறது.நேர்மையான நேர்காணல்கள் ஒரு நாவலை போல ஒரு சிறந்த திரைப்படத்தை போல வாழ்வும் வசந்தமும் என்ற சுந்தர ராமசாமியின் சிறுகதை போல வாழ்க்கையை நமக்கு அப்படியே அள்ளி தருகிறது.