தங்க மீன்கள்



கற்றது தமிழின் பிரபாகரனை விட தங்க மீன்களின் கல்யாணி தன்னை சுற்றியுள்ள மனிதர்களை நன்றாக புரிந்துகொள்கிறான்.அவனுக்கு யார் மீதும் புகார் இல்லை.கல்யாணி விமான நிலையத்தில் தன் தங்கையிடம் பேசிவிட்டு சென்றபின் அவளின் முகம் அண்மை காட்சியில் பதிவுசெய்யப்பட்டு இருக்கும்.கல்யாணிக்கு அவளின் தங்கை மீது எந்த புகாரும் இல்லை.தன்னை அறைந்துவிடும் தந்தை மீது கூட புகார் இல்லை.பார்வையாளர்களுக்கும் கல்யாணியை எல்லோரும் ஏளனம் செய்கிறார்கள் என்றோ புண்படுத்துகிறார்கள் என்றோ எண்ணம் ஏற்படும் வகையில் காட்சியில் அமைக்கப்படவில்லை.கல்யாணியின் தந்தை ‘அவன் மிகவும் நல்லவன், திரும்ப வருகையில் கொஞ்சம் கெட்டவனாகத்தான் வரட்டுமே’ என்று சொல்வார்.கல்யாணி லெளகீகமானவனாக மாறும் சித்திரமும் இந்த கதையில் இருக்கிறது.தன் குழந்தையை சித்ரவதை செய்யும் பள்ளி அமைப்பிலிருந்து மாற்றி அவளை அரசு பள்ளியில் சேர்க்கும் இடம் கூட அவன் உண்மையில் வாழ்வின் யதார்தத்தை புரிந்துகொள்ளும் இடம்தான்.

ஸ்டெல்லா மிஸ்ஸூம் பள்ளியும் கூட குற்றம் சொல்வதற்கு இல்லை என்பதைத்தான் எவிட்டா மிஸ் கதாபாத்திரம் உணர்த்துகிறது.இன்று மாறிவரும் பெருநகர அமைப்பின் சங்கிலியில் ஒரு கண்ணிதான் பள்ளிக்கூடங்கள்.சுதந்திரமான சிந்தனையும் வெளிப்பாடும் இந்த அமைப்பிற்கு தேவையில்லை.பள்ளியில் ஒரு குழந்தையின் உடல் ஒடுக்கப்படுகிறது.அந்த குழந்தை தன் இடத்தை விட்டு நகராமல் அமர வைப்பதற்கான முயற்சிதான் பள்ளியின் முக்கிய பயிற்சி.சுதந்திரமற்ற வெளியும் சுவர்களும் அவர்கள் பிற்காலத்தில் ஒரு அலுவலகத்தில் எந்த படைப்பூக்கமும் அற்ற வேலையை செய்ய வேண்டியதன் அவஸ்தையை எளிதாக்குவதற்கான ஒரு வழிமுறை.கல்யாணி தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு தன் குழந்தையை மாற்றுவது இந்த உலகமயமாக்கல் சங்கிலியின் கண்ணியாக தன் பிள்ளை மாற வேண்டாம் என்பதை உணரும் தருணம்.

பாத்திரங்களுக்கு ஈயம் புசும் வேலை உள்ளூரில் நலிவடைந்து வருவதால் கல்யாணி பெருநகரத்திற்கு சென்றே ஆக வேண்டிய அவசியம்.இன்றைய பெருநகர அமைப்பின் மனிதர்களாக மாறுவதற்காக நடத்தப்படும் பள்ளிகளின் அவசியம்.அப்படிப்பட்ட பள்ளியில் படிக்கும் செல்லம்மா.அவளுக்கு பெரிதாக பிரச்சனைகள் இல்லை.ஆனால் dyslexia போன்று கற்றுக்கொள்வதில் அவளுக்கு பிரச்சனைகள் இருக்கிறது.இங்கும் ஒரு விஷயம் இருக்கிறது.அவள் மற்ற பிள்ளைகள் போல இல்லை.அவளுக்கு சற்று வேறு விதமாக சொல்லித்தரவேண்டியிருக்கிறது.அத்தனை பெரிய பள்ளியில் அவளின் பிரச்சனைகளை கேட்டு ஆராய்ந்து அவளுக்கான வழிகளை உருவாக்கும் பொறுமை யாருக்கும் இல்லை.இன்று எல்லாமே ரெடிமேட் தான்.அந்த ரெடிமேட் அளவுக்கு கீழேயோ மேலேயோ நீங்கள் இருந்தால் தனிமைபடுத்தப்படுவீர்கள்.ஆக செல்லம்மா , கல்யாணி ஆகிய இருவரும் இன்றைய அமைப்பின் தேவைக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக்கொள்ள இயலாமல் தவிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் கல்யாணி தானும் சரி செல்லம்மாவும் சரி தங்களை அப்படி வடிவமைத்துக்கொள்ள தேவையில்லை என்பதை உணர்வதுதான் அரசுப்பள்ளியில் செல்லம்மா சேரும் இடம்.அவள் அங்கு குளத்தின் தங்க மீன்களை பார்க்கிறாள்.மறுபடியும் தன் குழந்தைமையை மீட்டெடுக்கிறாள்.இனி அவள் திருடப்போவதில்லை.கல்யாணி செல்லம்மா நாளை வந்து சேரவேண்டிய பெருநகர வேலைக்காக இன்று அங்கு போய் கஷ்டப்படதேவையில்லை.அந்த சிற்றூரே போதும்.இது தங்க மீன்களின் ஒரு முக்கிய இழை.

இந்த படத்தின் விளம்பரங்கள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.ரஜினிகாந்த் தன்னுடைய பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டுமென்று எஸ்.ராமகிருஷ்ணன் ஆசைப்படும் போது ,இலக்கிய நூல்கள் சினிமா இயக்குனர்களால் வெளியிடப்படும் போது, ஜெயமோகன் அப்துல் கலாம் கையால் விருது வாங்கும் போது , இத்தகைய விளம்பரங்களும் தவறில்லைதான்.மேலும் இன்றைய சூழலில் பெரிய அளவிலான விளம்பரங்கள் இல்லாமல் ஒரு திரைப்படம் திரைக்கு வந்ததா என்று கூட அறியமுடியாது.

No comments: