தலைமையாசிரியரின் காதல்கள்










தலைமையாசிரியர் சுப்பையா பிள்ளை
கல்லூரிப்பருவத்தில்
நூறு ஏக்கர் நிலமும் இரண்டு வீடுகளும்
வீட்டின் ஒரே பெண்ணுமான
சுதந்திராவை தீவிரமாக காதலித்தார்.

ஒரு டஜன் வாழைப்பழங்களை ஒரே மூச்சில் விழுங்கும்
சுப்பையா பிள்ளையை
சுதந்திராவும் தீவிரமாக நேசித்தார்.

ஒரு நாள் நள்ளரிவில் தன் கனவில்
சுப்பையா பிள்ளை வந்ததை
தன் தோழிகளிடம் சொல்லி உடல் சிலிர்த்தார் சுதந்திரா.
ஆனால் அந்தப் பெண் ஒரு காலைப் பொழுதில்
தலைமையாசிரியரை சந்திக்க விரைந்தோடி வந்த போது
சுப்பையா பிள்ளை சாப்பிட்டு வீசிய
வாழைப்பழத் தோல் வழுக்கி விழுந்து
சுப்பையா பிள்ளையின் மடியில் அகால மரணமடைந்தார்.
தாடி வளர்த்த தலைமையாசிரியர்
வாழ்க்கை என்பது சூன்யம்
என்று அறிவித்தார்.

இலக்கிய புத்தகங்கள் வாசித்தார்.
சுப்பையா பிள்ளையின் தந்தை சிவிலிங்க பிள்ளைக்கு
செலவு கூடாது என்பதற்காக இலக்கிய புத்தகங்களை
இரவல் வாங்கி வாசித்தார்.
வாசித்த புத்தகங்களை திரும்ப கொடுக்காமல் பாதுகாத்தார்.
சிறந்த வாசகரான தலைமையாசிரியர்
கவிதைகள் எழுத துவங்கினார்.
அவை பிரசுரமாயின.
இருத்தலிய அவதியை கவிதையில் சிறப்பாக
கொண்டுவந்துவிட்டதாக
பெண் விமர்சகர் பூக்குட்டி அவரை பாராட்டினார்.

வேலைக்கு சேர்ந்த இடத்தில்
மறுபடியும் ஒரு பெண்னைப் பார்த்தார்
சுப்பையா பிள்ளை.
தாடியை மழித்த சுப்பையா அந்தப் பெண்ணும்
எழுத்தாளர் என்பதை புரிந்துகொண்டார்.
பெண்ணின் உண்மையான பெயர் அமலா என்பதும்
அவளிடம் இரண்டு மாற்றுத் துணிகள்தான் உள்ளது என்பதையும்
அறிந்த சுப்பையா பிள்ளை
மறுபடியும் தாடி வளர்த்தார்.

சிவிலிங்க பிள்ளை 
இருநூறு ஏக்கர் நிலமும் மூன்று வீடுகளும் உள்ள
முத்துலிங்க பிள்ளையின் ஒரே பெண்னை
தலைமையாசிரியருக்கு பேசி முடித்தார்.
பெண் பார்க்கும் படலத்தில்
தன்னை கவிஞர் என்று சொல்லிய
தலைமையாசிரியர் தாடியை மழித்திருந்தார்.

வாழைப்பழ வீரன் சுப்பையா பிள்ளை 
கிடைக்காததால்
அமலா தற்கொலை செய்துக்கொண்டார்.

அதுவரை 
கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த
தலைமையாசிரியர் அன்று
இரண்டு டஜன் வாழைப்பழங்களை முழுங்கி
பெரும் சங்கல்பத்துடன்
தன் முதல் நாவல் தலைமையாசிரியரின் காதல்களை
எழுதத் தொடங்கினார்.ஓரிரவில் நாவலை முடித்தவர் அதை
அமலாவுக்கு சமர்பித்தார்.

தமிழ் கூறும் நல்லுலகு 
இருத்தலிய அவதியின் கோட்பாட்டை
சிறப்பாக முன்வைக்கும் நாவலை பெற்றது அதன் நல்லூழ்
என்று
நவீன பெண் விமர்சகர் பூக்குட்டி 
புத்தக வெளீயிட்டு விழாவில்
சிறப்பாக பேசினார்.

தலைமையாசிரியர் தன் மனைவியுடன்
வந்து விழாவை சிறப்பித்து
நன்றாக பேசிய பூக்குட்டிக்கு
இரண்டு டஜன் வாழைப்பழங்களை வழங்கினார்.
பின்னர் தன் "தலைமையாசிரியரின் காதல்கள்" நாவல்கள் 
ஏன் ஒருமுன்னோடி நாவல் 
என்று பேச துவங்கினார்
சுப்பையா பிள்ளை.
கூட்டம் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தது.

No comments: