இடதுசாரி லட்சியவாதம்




சிதாராம் யெச்சூரி சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்த போது சிபிஎம் கட்சியில் ஏதேனும் மாற்றங்கள் வரும் என்று நினைத்தேன்.அவர் வந்து ஒரு வருடம் மேலே கடந்து விட்டது.இதுவரை எதையும் அவர் செய்யவில்லை.எந்த மாற்றமும் நிகழவில்லை.பிரகாஷ் காரத் சிபிஎம் கட்சியின் மூடுவிழாவை தொடங்கி வைத்தார்.அது அப்படியே அந்த திசையில்தான் செல்கிறது.மேற்கு வங்காளத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்த முயற்சிகள் மாவோயிச - திரினாமூல் கூட்டணியால் தீவிரமாக எதிர்க்கப்பட்டு கம்யூணிஸ்ட் கட்சி அங்கு வரும் சாத்தியமே இல்லாத நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

சிபிஎம் கட்சியும் சிபிஐயும் இன்றைய காலகட்டத்தில் ஒரு கட்சியாக இணைந்திருக்க வேண்டும்.அவர்கள் பிரிந்த போது இருந்த காரணம் இந்தியாவை இரு கட்சிகள் எப்படிப் பார்க்கிறாரகள் என்பதே.ஒரு தரப்பு சீனாவை ஆதரித்தது.ஒரு தரப்பு இந்தியாவை ஆதிரித்தது.இன்று உலகமயமாக்கல் சூழலில் இத்தகைய நிலைப்பாடுகளுக்கு பொருள் இல்லை.அவர்கள் இருவரும் இணைய வேண்டும்.ஆனால் இனி இணைந்தால் கூட பெரிய மாற்றத்தை அவர்களால் கொண்டு வர முடியாது என்றுதான் தோன்றுகிறது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சச்சரவில் கண்ணையா குமார் உள்ளிட்ட சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.கண்ணையா குமார் சிபிஐ கட்சியின் மாணவர் அமைப்பில் இருப்பவர்.இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர் எனக் கொள்ளலாம்.இவர் வருங்காலத்தில் என்ன செய்யக்கூடும்.சிபிஐயில் பொறுப்பு வகிக்கலாம்.சிபிஎம் செல்லலாம்.புதிதாக ஒரு இடதுசாரி அமைப்பை தொடங்கலாம்.அல்லது மாவோயிஸ அமைப்புகளை ஆதரிக்கலாம்.ஆனால் இவர் எதை செய்தாலும் அது ஒன்றுமில்லாமல்தான் ஆகும்.அவரால் ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.ஒன்று அரசாங்கம் அவரை விலைக்கு வாங்கி விடும் ,அல்லது நசுக்கி விடும் அல்லது தன்னில் ஒருவராக மாற்றிவிடும் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் நிலையில்தான் அவர் இருப்பார்.

இன்று இங்கு எதுவுமே ஐந்து நிமிட பரபரப்புதான்.அதன்பின் அவரவருக்கு தன் வேலை ,காதலி,திருமணம் ,குழந்தைகள்,சாலைப் போக்குவரத்து,உடல் பருமன்,வெளிநாட்டு பயணம்,படிப்பு , குடும்பச் சிக்கல்கள்,வெங்காய விலையேற்றம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது.

இன்றைய அனைவரின் முக்கிய கவலைகள் பணம்,பதவி,அதிகாரம்,செளகரியங்கள்.லட்சியவாதம் எங்கும் கொண்டு செல்லாது என்பது இன்று எந்த மனிதனும் புரிந்துவைத்திருக்கும் யதார்த்தம்.யாரும் பாவம் புண்ணியம் என்றெல்லாம் பயப்படுவதில்லை.லட்சியவாதம் என்று பேசுவதே இன்று கேலியாகிவிட்டது.தெருவில் இறங்கி நடந்தால் உலகம் பொருள் பொருள் நுகர்வு நுகர்வு என்று அன்னை பன்றியின் மடியை முட்டும் குட்டிப் பன்றிகள் போல ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்று சாதிகளால் உருவான ஏற்றத்தாழ்வுகள் அப்படியே இருக்கின்றன.இருக்கும்.இங்கே இருப்பவர்கள் தங்கள் இடத்தை விடப்போவதில்லை.அதை புதிதாக வருபவர்கள் பெறுவதும் எளிதல்ல.இன்று திருமணம்,காதல் கூட ஒரு பொருளை பெறுவது போலத்தான் பார்க்கப்படுகிறது.இன்றைய சூழலில் செவ்வியல் மார்க்ஸிய கோட்பாடுகள் எந்த வகையிலும் உதவாது.இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களை எந்த வகையிலும் புதிப்பித்து கொள்ளவில்லை.சூழியல் அறிஞர்கள் இயற்கைக்கு திரும்பலாம் என்கிறார்கள்.எந்த அளவுக்கு திரும்புவது திரும்பினால் கழுத்து வலிக்குமா என்பதும், அங்கு சாதி பெரிய சிக்கலாக இருப்பதும் பிரச்சனைகளாக இருக்கின்றன.

இன்று அடிப்படையில் மாற்று உலகம் சார்ந்த எந்த கனவுகளும் யாருக்கும் இல்லை.கடவுள் நம்பிக்கையாளர்கள்,மறுப்பாளர்கள்,லட்சியவாதிகள் யாருக்கும் எதன் பொருட்டு எதையும் முன்வைப்பது என்று புரியவே இல்லை.நான் உங்களை அடிக்கக்கூடாது , சுரண்டக்கூடாது என்பது சட்டத்திற்கு அப்பால் எதன் அடிப்படையில் நான் ஏற்க வேண்டும்? உங்களை அன்பு என்ற சூது கொண்டு ஏமாற்றி நான் சுரண்டுகிறேன் எனக் கொள்வோம்.நீங்கள் ஏமாற்றத்தை உணர்ந்து ஐயோ பாவம் செய்துவிட்டாயே என்று சொன்னால் எதன் அடிப்படையில் அதை பாவம் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்கலாம்.இந்த பாவம் என்று சொல்வதின் அடிப்படைகளை நாம் யாரும் இன்று நம்புவது இல்லை.ஒரு பாவச்செயல் நம்மை அதிரச்செய்வதில்லை.சட்டம் ஒன்று மட்டுமே நம்மை தடுக்கிறது.இன்றும் பாவ புண்ணியத்தை நம்பும் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்தான்.ஆனால் இன்று படித்து வரும் இளைஞர்கள் மத்தியில் இத்தகைய பாவம் புண்ணியம் என்ற நோக்கமெல்லாம் இல்லை என்பதே உண்மை.பாவம் புண்ணியம் என்பதே கடவுளின் அடிப்படையில் உருவானது.நாம்தான் விஞ்ஞானம் கொண்டு கடவுளை கொண்றுவிட்டோமே.

முன்னர் ஒரு மாற்று கனவாக இருந்த சோவியத் ரஷியா வீழ்ச்சி அடைந்து இன்று இருபத்தியைந்து வருடங்கள் கடந்துவிட்டன.இன்று மாற்று கனவு இருக்கும் சில இளைஞர்களை இஸ்லாமிய  மதத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.வஹாபிஸம் மிக ஆழமாக நம் சூழலில் வேரூன்றி விட்டது.அவர்கள் முன்வைக்கும் இஸ்லாம் பல இளைஞர்களை மிகவும் இறுக்கமாக்கி விட்டிருக்கிறது.அவர்களுக்குள் இருந்த நெகிழ்வுத்தன்மை காணாமல் போய்விட்டது.இது ஒரு முக்கிய சிக்கல்.

இன்று இடதுசாரி சிந்தனை என்பது ஒரு மாற்று கனவை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.வஹாபிஸம் முன்வைக்கும் இறுக்கமான இஸ்லாமிய நெறி ஏன் நம் இந்திய மண்ணுக்கு சரியானதில்லை என்பதை சொல்ல வேண்டிய நிலையில் இடதுசாரி சிந்தனை இருக்கிறது.இந்திய தேசத்தையும் இந்து மதத்தையும் இணைக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் முயற்சிகள் எப்படி நம் இந்திய மண்ணின் பல்சமூக இணக்கமான வாழ்க்கைக்கு எதிரானது என்பதை வலியுறுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறது.நுகர்வு கலாச்சாரம் தேவையற்றது என்றால் இன்றைய பொருள் சார்ந்த வாழ்க்கை முறை தவறானது.இன்றைய பொருள் சார்ந்த வாழ்க்கை முறை தவறானது என்றால் நமது பெருநகர வாழ்க்கையும் அதை உருவாக்க காரணமாக இருந்த படிப்பு , வேலை , தொழில்துறைகள் போன்ற விஷயங்களுக்கு மாற்றான ஒரு சிந்தனையை உருவாக்க வேண்டும்.அது இயற்கைக்கு திரும்புதல் என்றால் அது எப்படியான இயற்ககைக்கு திரும்புதல் என்ற தரிசனத்தை இடதுசாரி சிந்தனைகள் வளர்க்க வேண்டும்.அல்லது இருக்கும் சூழலையே வேறொன்றாக மாற்றுவதாக அது அமைய வேண்டும்.அப்போது மட்டுமே இடதுசாரி கட்சிகள் உயிர்பெற்று இருக்க முடியும்.

ஆனால் இந்த விஷயங்கள் அத்தனை எளிதல் சாத்தியமாக கூடிய விஷயங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.இனி சில பத்தாண்டுகளுக்கு இடதுசாரிகள் நம் மண்ணில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.அவர்கள் மறுபடி வருவார்கள் என்றால் இங்கே ஏதோ ஒரு லட்சியவாதம் உருவாகிவிட்டது என்று பொருள்.ஆனால் அதை நாம் முன்பே இலக்கியத்தில் கண்டுகொள்ளலாம்.இப்போது புதிய வகையிலான மாற்று கனவை முன்வைக்கும் ஒரு நாவல் ,கவிதை ,சிறுகதை நம் சூழலில் இருக்கிறதா.அப்படி ஒன்று வலுவாக உருவாகும் போது நம் இடதுசாரிகளும் மீண்டு வருவார்கள் என்று கொள்ளலாம்.



மனிதனுக்கு மரணமில்லை






ஆர்.கே.நாராயணனின் என் நாட்கள்(My Days) சுயசரிதையில் தன் மனைவி இறந்தவுடன் தன் நான்கு வயது பெண் குழந்தையுடன் சென்னை வருகிறார் நாராயணன்.ஆர்.கே இலக்கற்று அலைகிறார்.அவர் மனம் அவரின் மனைவியின் மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.தொடர் உள் மன உரையாடல்கள்.மன அழுத்தம்.ஒரு முறை மைலாப்பூரில் கடற்கரை நோக்கி வேகமாக செல்கிறார்.தனக்கு தெரிந்த ஒருவரை வழியில் சந்திக்கிறார்.அவர் ஆர்.கேவிடம் ஒரு யோசனை சொல்கிறார்.மாலையில் தனக்கு தெரிந்த ஒரு வக்கீல் வீட்டுக்கு வரச் சொல்கிறார்.எதாவது மீட்சி கிடைக்கும் என்ற எண்ணத்தில் நாராயணன் செல்கிறார்.அந்த வக்கீல் ஒரு அறையில் நாராயணனனையும் உடன் வந்தவரையும் அமரச் செய்கிறார்.ஒரு பைனாவையும் காகித கட்டையும் மேஜையில் வைக்கிறார்.சிறிது நேரத்தில் வக்கீல் வேகமாக அந்த காகிதத்தில் கிறுக்கிறார்.அவர் எழுதும் வேகம் கண்டு நாராயணன் ஆச்சரியம் கொள்கிறார்.ஒரு சாதாரண மனிதனால் இத்தனை வேகத்தோடு ழுத முடியாது என்று நினைக்கிறார்.நாராயணின் மனைவி சொல்வதை வக்கீல் வேகமாக எழுதுகிறார்.நாராயணின் மனைவி அவரிடம் நான் எப்போதும் உங்களோடு இருப்பேன் என்கிறார்.நீங்கள் துயரத்திலிருப்பது எனக்கு கவலை அளிக்கிறது என்கிறார்.ஆர்.கே. ஏதோ கேள்வி கேட்கிறார்.அதற்கு அவர் மனைவி சரியான பதிலை சொல்கிறார்.ஆர்.கேவின் ஆழ்மனம் தன் மனைவி தன் கண்ணுக்கு தெரியவில்லை,பூத உடல் மறைந்துவிட்டது.ஆனால் அவள் இருக்கிறாள்,எப்போதும் இருப்பாள் என்பதை உணர்கிறது.அங்கே வக்கீல் எழுதியவை நிச்சயம் தன் மனைவி சொல்லித்தான் என்று நம்புகிறார்.அதன் பின் அவர் மனம் அமைதி அடைகிறது.அழுத்தம் குறைகிறது.பழையபடி எழுதுகிறார்.படிக்கிறார்.தன் குழந்தையை நன்றாக வளர்க்கிறார்.மறுமணம் செய்துக்கொள்ள பலரும் சொல்லியும் அதை அவர் பொருட்படுத்தக்கூட இல்லை.பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து முதுமையில் மரணமடைந்தார்.

என் நண்பர் ஆத்மாநாம் என்ற கட்டுரை தொகுப்பில் ஸ்டெல்லா புரூஸ் தன் மனைவி ஹேமா மரணம் அடைந்தபின்னும் பூத உடல் இன்றி அவர் தன் மனைவியின் இருப்பை உணர்ந்த அபூர்வ தருணங்களை பட்டியலிடுகிறார்.அய்யம்பாளையம் என்ற ஊரில் 2050 ஆம் ஆண்டு தன் மனைவி மறுபிறவி எடுப்பார் என்கிறார்.ஆனால் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துக்கொள்கிறார்.நம் நெருங்கிய மனிதர் மரணமடையும் போது இனி அவர் இல்லை என்பதை நாம் ஏற்க விரும்புவதில்லை.ஏதோ ஒரு வகையில் இந்த உலகில் அவர் இருக்கிறார் என்று நம்ப விழைகிறாம்.பித்ரு தர்ப்பணம் தருகிறோம்.தனக்கு பிறக்கும் குழந்தை தன் தந்தைதான் அல்லது அன்னைதான் என்று மரணமடைந்தவர் மறுபடியும் வந்துவிட்டார் என்று நம்ப விழைகிறோம்.நாம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது கூட நாம் இங்கு இருக்க விரும்புகிறோம் என்கிற காரணத்தால் தான் என்று தோன்றுகிறது.தார்கோவ்ஸ்கியின் தி மிரர் படத்தில் உயிர் தொடர்ச்சியை மையப்படுத்துகிறார்.அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்.இந்த விஷயத்தில் இறை மறுப்பாளர்கள் , பகுத்தறிவுவாதிகள் என்ற பேதமெல்லாம் இல்லை.

ஒரு இந்திய தந்தை தன் மகன் தானேதான் என்று நினைக்கிறான்.அவனுக்கு தன்னால் இயன்றவற்றை தொடர்ந்து செய்கிறான்.அவனை தன்னால் எந்தளவுக்கு உயர்த்தி ஒரு பீடத்தில் அமர வைக்க முடியுமோ அதைச் செய்கிறான்.ஒரு முதலமைச்சர் தன் மகனை முதலமைச்சர் ஆக்குகிறார்,தாசில்தார் தன் மகனை மாவட்ட ஆட்சியாளராக்க முயல்கிறார்.இது எல்லா தளங்களிலும் நிகழ்கிறது.இதிலிருப்பது நாம் இன்னும் சில வருடங்கள் வாழ வேண்டும் என்ற நோக்கமின்றி வேறில்லை.மிஸ்டிக்கலான அனுபங்கள் எண்ணங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.முழு இறை மறுப்பாளர் கூட சாலையில் நடந்து செல்லும் போது ஒரு காவி உடை அணிந்த கிழவர் தன்னருகில் அழைத்து நீ நன்றாக இருப்பாய் மகனே , உன் வாழ்வில் சில துர் சம்பவங்களை சந்திக்க இருக்கிறாய் , அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் உனக்கு சித்தியாகட்டும் என்று சொன்னால் நிச்சயம் அன்று முழுவதும் அந்த எண்ணம் அவருடைய மனதில் இருந்துக்கொண்டே இருக்கும்.

எல்லோருக்கும் நாம் ஏதோ ஒரு வகையில் அபூர்வமானவர்கள் என்ற எண்ணம் உள்ளது.நமது பிறந்த தேதி,ஊர்,நாள்,ராசி,நட்சத்திரம் சார்ந்த ஏதோ ஒரு வகை அதிசயத்தை ரகசியமாகவாவது வைத்துக்கொள்கிறோம்.இத்தனை கோடிக்கணக்கான மனிதர்கள் வாழும் பூமியில் இத்தனை மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மண்ணில் ஒரு சின்ன பூகம்பம் சில ஆயிரம் மனிதர்களை சுருட்டிக்கொள்ளலாம் என்கிற நிலையில் நாம் இந்த அதிசயத்தை ரகசியமாக நீவிக்கொள்கிறோம்.இவை ஒரு வகையில் அற்பமானவை.ஒரு வகையில் யூதிஸ்டரர் சொல்வது போல மனித மனத்தின் பேரதிசயம்.

தன்னைக்குறித்து தன் நெருங்கிய மனிதர்களின் மரணம் குறித்து தனக்கு பிறக்கும் வாரிசுகள் குறித்து மனிதனுக்கு இருக்கும் எண்ணங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமானவை.இங்கே எல்லாவற்றையும் பகுத்தறிவால் விளக்கி விட முடிவதில்லை என்பதால் எப்போதும் இத்தகைய விஷயங்கள் சார்ந்து ஒரு மயக்கம் எல்லோருக்கும் இருக்கிறது.இத்தகைய விஷயங்கள் அழியாத் தொன்மங்களாக தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது.ஒரு வகையில் அடுத்த நாளை எதிர்கொள்ளவே இத்தகைய தொன்மங்கள் அவசியமானதாக இருக்கின்றன.இல்லையென்றால் ஒரு காய்ந்த சருகை போல உதிரும் ஒரு நாளை அத்தனை ஆவேசத்துடன் ஏன் மனிதன் எதிர்கொள்ள போகிறான்.

எனக்கு ஆச்சரியமானதாக இருந்தது ஆர்.கே.நாராயணனும் ஸ்டெல்லா புரூஸூம் இதை வெளிப்படையாகவே எழுதியிருப்பதுதான்.ஏனேனில் இது எளிதில் கேலி செய்யப்படக்கூடிய விஷயம்.ஒருவர் ஆர்.கே.விடம் இது உங்கள் ஆழ்மனம் கொள்ளும் மயக்கமின்றி வேறில்லை என்று நிறுவலாம்.ஆனால் ஆர்.கே. அதை ஏற்கத்தயாராக இல்லை.இங்கு அவருக்கு ஒரு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை.அவர் தன் மனைவி தன் கண்ணுக்கு புலப்படாத வேறு ஒரு உலகில் வாழ்கிறாள்.தான் முயன்றால் அவளுடன் பேச முடியும் என்பதே அவருக்கு போதுமானதாக இருக்கிறது.அந்த எண்ணம்தான் அவர்களுக்கு தேவைப்படுகிறது.மனிதனுக்கு மரணமில்லை என்பதைத்தான் மனிதன் நம்ப முற்படுகிறான்.அதுவே அவன் அடுத்த நாளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்கிறது.



எனது ஆசானுக்கு







To My Teacher

An old grave hidden away at the foot of a deserted hill,
Overrun with rank weeds growing unchecked year after year;
There is no one left to tend the tomb,
And only an occasional woodcutter passes by.
Once I was his pupil, a youth with shaggy hair,
Learning deeply from him by the Narrow River.
One morning I set off on my solitary journey
And the years passed between us in silence.
Now I have returned to find him at rest here;
How can I honor his departed spirit?
I pour a dipper of pure water over his tombstone
And offer a silent prayer.
The sun suddenly disappears behind the hill
And I’m enveloped by the roar of the wind in the pines.
I try to pull myself away but cannot;
A flood of tears soaks my sleeves.


எனது ஆசானுக்கு

ஆள் அரவமற்ற மலையின் சரிவில்
ஆண்டாடுகளாக கவனிப்பாரற்று பரவியிருந்த நெடு களைகளில்
புதைந்திருந்தது ஒரு பழைய கல்லறை;

எப்போதாவாவது கடக்கும் விறகுவெட்டி,
சமாதியை பராமரிக்க யாருமில்லை.
நான் முன்பு அவரின் மாணவன், பரட்டை தலைமூடி கொண்ட யுவன்,
குறுகலான நதியின் கரையில் அவரிடம் ஆழமாக கற்றேன்
ஒரு காலை நான் எனது தனித்த பயணத்தை துவக்கினேன்.
எங்களுக்கு மத்தியிலான காலம் அமைதியில் கழிந்தது.
நான் இப்போது திரும்பியிருக்கிறேன், அவர் துயிலில் ஆழ்ந்திருப்பதை கண்டுகொள்ள.
நான் எப்படி அவரின் பிரிந்த ஆன்மாவிற்கு மரியாதை செலுத்துவது?
அகப்பையால் தூய நீரை நினைவுக்கல் மீது ஊற்றி
மெளனமாக பிராத்தனை செய்தேன்.
சட்டென்று சூரியன் மலைக்கு பின்னே மறைந்தது.
தேவதாரு மரங்களின் காற்றின் பேரோசையால் சூழப்பட்டேன்.
நான் என்னை விடுவித்துக் கொள்ள முயன்று தோற்றேன்;
என் சட்டைக்கைகளில் தெப்பமாக கண்ணீர்.   


*

To kindle a fire,
the autumn winds have piled
a few dead leaves.

தீ மூட்ட
இலையுதிர்கால காற்று குவித்திருக்கிறது
கொஞ்சம் சருகுகளை.


 - ட்டய்கு ரியோக்கன் கவிதைகள்.