தனி மனித சமூகம்




எஸ்.குருமூர்த்தி கூட ஜெயமோகன் போல வாதாட தயங்குவார்.ஆனால் ஜெயமோகன் இந்த விஷயத்தில் அவரின் வாதங்களை தெளிவாகவே முன்வைத்திருக்கார்.அமெரிக்கா போலவோ ,ஐரோப்பா போலவோ இந்தியா நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து தனிமனிதர்களலான காலத்திற்கு வந்து பின்னர் இங்கு தொழில்மயம் உருவாகவில்லை.

இங்கே நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் மட்டுமே இருந்த கட்டத்தில் சட்டென்று தொழில்மயம் உருவாகிறது .இங்கு தனிமனித விழுமியங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.நான், என் குடும்பம், என் ஜாதி,என் மக்கள் அவ்வளவுதான்.கடவுளை கும்பிட வரிசையில் நிற்பதை அவமானமாக கருதும் சமூகம் இது.யாரை பிடித்தால் சட்டென்று உள்சென்று பரிவட்டம் கட்டி வேலையை முடித்து விட்டு வரலாம் என்று நினைக்கும் சமூகம்.

இந்த சமூகத்தை நவீன அரசின் அமைப்புக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் இந்த அரசு செய்வது சரியானதுதான்.நிலப்பிரபுத்துவ சமூகம் பணத்தை வீட்டில் வைக்கும்.வரி செலுத்தாது.தனிமனித சமூகம் வங்கியில் வைக்கும்.வரி செலுத்தும்.வங்கியில் வைக்க இதுதான் வழி.போகன் சங்கர் சொன்னது போல பணக்காரர்கள் எப்போதும் தப்பிக்கிறார்கள்.பத்தாயிரம் கோடி ரூபாய் எய்த்தவர் தப்பித்துவிட்டார் என்பதால் ஒரு கோடி ரூபாய் எய்த்தவர் தப்பிக்கலாம் என்றில்லை.

கோசாம்பி இந்திய வரலாறு பற்றி எழுதிய புத்தகத்தில் நம் கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது என்கிறார்.இங்கே உருவான சாம்ராஜ்ஜியங்கள் ஒரு வகையில் அவர்களின் தலைக்கு மேலே செல்லும் மேகங்கள் போன்றவையாகி இருந்திருக்கிறது.ஆனால் சட்டென்று 1900களில் இங்கே பல்கலைகழகங்கள் உருவாகின்றன.நகரங்கள் உருவாகுகின்றன.படித்து வேலை செய்யும் முதல் தலைமுறை உருவாகுகிறது.1950களில் சோஷயிலச அரசு வருகிறது.1990களில் மிகப்பெரிய பாய்ச்சலாக தொழில்மயமும் தாராளமயமும் வந்துவிட்டது.இங்கே நகரங்களில் தனிமனிதர்கள் உருவாகுகிறார்கள்.1940களில் புதுமைப்பித்தன் கதைகளில் வந்த தனிமனிதன் உண்மையில் பெரிய அளவில் 2000களுக்கு பிறகே வந்தான்.நூறு வருடங்களில் மிகப்பெரிய சமூக மாற்றம்.ஆனால் பண்பாட்டு அளவில் நாம் அதே நிலப்பிரபுத்துவ சமூகமாகத்தான் இருக்கிறோம்.ஒரு நவீன அரசின் மனிதர்களாக மாறவில்லை." முன்னேறிய நாடுகள் தங்களுடைய சாதனைகளை தாராண்மைவாத யுகத்தின் வழி நிகழ்த்திக்கொள்ளும்" என்கிறார் மார்க்யூஸா.ஆகையால் இங்கே கிட்டத்தட்ட இருநூறு வருட கால வித்யாசம் கொண்ட மனிதர்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்கிறார்கள்.இத்தனை பெரிய வித்யாசங்கள் கொண்ட சமூகம் உலகில் வேறு எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.அப்படியான ஒரு சமூகத்தில் நவீன அரசு தனிமனிதர்களின் விழுமியங்களை கோரும் சட்டங்களை இயற்றுவது மிக கடினமான செயல்.இது ஒரு வகையில் பண்பாட்டு ரீதியிலான பிரச்சனையும் கூட.இங்கே பலருக்கு நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்றே புரியவில்லை.ஒரு முறை என்னுடன் கர்நாடகவில் பணிபுரிந்தவன் தன் கிராமத்திற்கு சென்றால் வீட்டு கழிப்பறையை பயன்படுத்துவதில்லை , வெளியில்தான் செல்கிறேன் என்றான்.மேலும் ஏன் வீட்டில் கழிப்பறைகளை பயன்படுத்த இந்த அரசு அறிவுறுத்துகிறது என்று புரியவில்லை என்றான்.அவன் இருபத்தியோராம் நூற்றாண்டின் மனிதன்.என்னைவிட வயதில் சிறியவன்.இங்கே எதையும் செய்வது எளிதல்ல.

கமிஷன் அடிப்படையில் பணமாற்றம் செய்யலாம் என்று இப்போது ஐநூறு ஆயிர ரூபாயை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இருபத்தி ஐந்து லட்சத்தை இருபத்தியோறு லட்சமாக மாற்றி நான்கு லட்ச ரூபாயை கமிஷனாக பெற முயன்ற வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.கணக்கில் இல்லாத பணத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பலரிடம் கொடுத்து பிறகு அதே பணத்தை வெள்ளை பணமாக மாற்றுகிறார்கள்.இதற்கு ஒன்று தங்களுக்கு தெரிந்தவர்களை பயன்படுத்த முயல்கிறார்கள்.அல்லது செயல்படாத வங்கி கணக்குகளை பயன்படுத்த முயல்கிறார்கள்.இரண்டாவதை செய்வதற்கு வங்கி அதிகாரிகளின் உதவி தேவைப்படுகிறது.இதற்கு பெயர் Money Laundering.இதை தடுக்க Anti Money Laundering முறையை எல்லா வங்கிகளிலும் அமல்படுத்தவேண்டும்.சட்டென்று ஒருவரின் வங்கி கணக்கில் சிறுசிறு தொகைகளாக பல லட்சம் குவிகிறது என்றால் அது கண்டறியப்படும்.அநேகமாக இவர்களில் பலர் இப்போது பழைய ஐநூறு,ஆயிர ரூபாய்களை பலரின் வங்கி கணக்கில் செலுத்தி அதை அவர்களையே எடுக்க வைத்து கமிஷனாக கொஞ்சம் பணத்தை கொடுத்து பிறகு வெள்ளை பணமாக மாற்றிக்கொள்கிறார்கள்.இதை தடுக்கத்தான் மை வைக்கிறார்கள்.KYC எனும் Know your customer மற்றும் Anti Money Laundering ஆகியவற்றை அமல்படுத்தினால் திடீரென்று ஒருவரின் வங்கி கணக்கில் எப்படி சிறு சிறு தொகை வருகிறது என்று கண்டரியமுடியும்.அந்த வாடிக்கையாளர் யார் , என்ன தொழில் செய்கிறார் போன்ற விபரங்களை வங்கிகள் பெற வேண்டும்.அப்போது சிறு சிறு தொகையாக ஒரு லட்ச ரூபாயை செலுத்தினால் அவரின் பணத்தின் மூலத்தை கேட்டறியலாம்.இப்படி நடக்கிறது என்றாலே யாரும் கமிஷன் அடிப்படையில் உதவ மறுப்பார்கள்.ஆர்பிஐ இதை விரைவாக இந்திய வங்கிகளில் செயல்படுத்த வேண்டும்.

ராஜன் குறை ஜெயமோகனின் கட்டுரைப்பற்றி எழுதியுள்ள குறிப்பில் எந்த வாதத்தையும் கட்டி எழுப்பவில்லை.மாதம் சம்பளம் வாங்குபவர் இரண்டரை லட்சம் மேல் வாங்கினால் வரி கட்ட வேண்டும்.ஹோட்டல் வைத்திருப்பவர் பத்து லட்சம் மேல் சம்பாதித்தால் முப்பது சதவிகிதம் வரி கட்ட வேண்டும்.வருமான வரியை குறைக்க விலக்குகள் உண்டு.அதை செய்யலாம்.அதை விடுத்து அவர் மறுபடியும் தொழிலில் தான் செலுத்துகிறார் ,அதனால் வரி கட்ட தேவையில்லை என்றால் மாத சம்பளக்காரர்கள் கூட பணம் சேர்த்து தொழில் தொடங்கலாம்,அதனால் வரி கட்டத் தேவையில்லை எனலாம்.மேலும் அவர்கள் ஈட்டும் பணத்திற்குத்தான் அவர்கள் பணம் கட்ட வேண்டும்.சேவை வரி முதலியவை வாடிக்கையாளர்கள் செலுத்துகிறார்கள்.

இங்கே பெரு முதலாளிகள்,தொழிலாளிகள் என்ற இரண்டே பிரிவுதான் உள்ளது போல எழுதப்படுகிறது.நடுவில் சிறு முதலாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.இவர்களில் கனிசமானோர் வரி கட்டுவதில்லை.அல்லது மிகக் குறைந்த தொகையை கட்டுகிறார்கள்.அவர்கள் ஏன் வரி கட்டக்கூடாது.இவர்களில் அநேகர் நகைகளிலும் , ரியல் எஸ்டேட்களிலும் தங்களை பணத்தை முதலீடு செய்கிறார்கள்.அவர்களிடமிருந்து எப்படி பணத்தை மீட்பது.அவர்கள் எப்போதும் எல்லா பரிவர்த்தனைகளையும் liquid cashயில் தான் செய்கிறார்கள்.இங்கே உழவர் சந்தை அமைப்புகளை வளர விடாமல் தடுத்தார்கள்.ரியல் எஸ்டேட்களில் ஒரு சதுர அடிக்கு பணத்தை நூறு சதவிகிதம் ஏற்றி விற்கிறார்கள்.இதெல்லாம் தவறே இல்லையா.இப்போது ஐநூறு ஆயிர ரூபாய் செல்லாது என்கிற போது இவர்களில் பலரும் பதறுகிறார்கள்.என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.ஆனால் இவர்கள் சொல்வது போல சாமானிய மனிதன் கஷ்டப்படுகிறான் என்றால் இங்கே ஏன் பெரிய கொந்தளிப்பு இயல்பாக உருவாகவில்லை.இங்கே மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.சில்லறை மாற்றுவதில் சிக்கல் இருக்கிறது.தினசரி தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியவில்லை.பண ஓட்டம் குறைந்துவிட்டது.ஏன் முதலில் ஐநூறு ரூபாய் கொண்டு வராமல் இரண்டாயிரம் ரூபாயை கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லைதான்.

ஆனால் இங்கே எழுதுபவர்களின் உண்மையான அக்கறை யாருக்கானது என்றே தெரியவில்லை.இந்தியா முழுவதுமாக liquid cash அற்ற சமூகமாக மாறுவது அதன் ஆன்மிக தளத்திற்கே பாதகமானது.ஆனால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை.இங்கே மக்கள் கொந்தளிக்கிறார்களோ இல்லையோ நிறைய அறிவு ஜீவிகள் கொந்தளிக்கிறார்கள்.


1 comment:

சர்வோத்தமன் சடகோபன் said...

இது பேஸ்புக்கில் எழுதிய சில நிலைத்தகவல்களின் தொகுப்பு.போகன் சங்கர் இதன் முதல் நிலைத்தகவலின் எதிர்வினையாக "ஒரு அரசாங்கம் அதிகாரத்தால் மட்டும் நிலைபெறக் கூடாது அறத்தாலும் நிலை பெறவேண்டும்..அரசாங்கம் அறம் கொண்டு இயங்குகிறது என்ற நம்பிக்கை வரவேண்டும்.அறம் என்பது எல்லோருக்கும் ஒரு வரிசை ஒரு வாசல் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அரசுதான் தனது செய்கைகளால் வரவழைக்க வேண்டும்.அதில் இரண்டு முகம் காட்டினால் மக்களும் அதே வழியைப் பின்பற்றுவார்கள்" என்று எழுதினார்.

அதற்கு பதிலாக கோசாம்பி இந்திய வரலாற்றை பற்றி எழுதியதை சொன்னேன்.அதற்கு போகன் சங்கர் "நான் இந்த செயலைக் குறை கூறவில்லை என்பதைக் கவனிக்கவும்.அதற்கான அறத் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்." என்றார்.அவர் சொல்வது முற்றிலும் சரிதான்.