ச.சீ.கண்ணன்




ச.சீ.கண்ணன் பற்றி காலச்சுவடு இதழில் பொன்.தனசேகரன் எழுதியுள்ள கட்டுரை அற்புதமாக இருக்கிறது.ஜவஹர் என்பவர் ஃப்ரண்ட்லைன் இதழிலும் எழுதியிருந்தார்.ஆச்சரியமான வாழ்க்கை.ச.சீ.கண்ணனுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் அவரை பனாரஸ் இந்து பல்கலையில் அவர் தந்தை சேர்க்கிறார்.அது அவர் ஆளுமையில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது என்று தோன்றுகிறது.அங்கு தான் அவருக்கு கம்யூனிஸம் அறிமுகமாகியிருக்கிறது.எம்.பி.ஸ்ரீனிவாசன்,பி.ராமமூர்த்தி போன்றோர் அங்கு அவருடன் படித்திருக்கிறார்கள்.நம்மால் அரை மணி நேரம் கூட இன்னொருவருக்கு செலவழிக்க முடியாத போது எப்படி இவரை போன்றவர்கள் இவ்வளவு நேரத்தை பிறரின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை.அபாரமான லட்சியவாதி.இந்தியாவில் இடதுசாரி சிந்தனையை ஏற்ற பலர் காந்தியத்தின் எளிமையையும் ஏற்று வாழ்ந்திருக்கிறார்கள்.கண்ணன் அப்படியான ஒருவர்.எத்தனை பேரின் வாழ்வை மாற்றியிருக்கிறார்.

உண்மையில் சுதந்திரம் அடைந்த போது அபாரமான லட்சியவாதம் எங்கும் இருந்தருக்கிறது.அப்போது இளமையில் இருந்த பலருக்கு அந்த லட்சியவாதம் வாழ்வின் ,தங்களின் ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறியிருக்கிறது.தம்பையா போன்ற மருத்துவர்கள் அப்படியான தலைமுறையால் உருவானார்கள்.எழுபதுகளில் எண்பதுகளில் லட்சியவாதத்தின் தோல்வியை எதிர்கொண்ட ஒரு தலைமுறையினர் உருவானார்கள்.அரவிந்தனின் உத்ராயணம் படத்தில் ரவி அப்படியான ஒரு கதாபாத்திரம்.அரவிந்தனுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவராக இருந்திருக்கிறார்.எண்பதுகளில் இளமையிலிருந்த பலருக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படித்தான் இருந்திருக்கிறார்.அவர்களிடம் ஒரு தீவிரம் இருந்திருக்கிறது.நக்ஸல்பாரி அமைப்புகளில் சேர்ந்தார்கள்.ஒரு அவதி இருந்திருக்கிறது.இருத்தலிய துயரம் இருந்திருக்கி்றது.ஆனால் அவர்களிலிருந்து ஒரு கண்ணன் உருவாகவில்லை.

இன்று அதற்கு அடுத்த தலைமுறையினர் அந்த எழுபதுகளின் எண்பதுகளின் இறுக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு அந்த இறுக்கத்தை கேலி செய்துகொண்டு மதுபானக்கடையில்,காபி,டீ கடைகளில் லட்சியவாதத்தை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு அடுத்த தலைமுறையினர் என்ன செய்வார்கள் என்று பார்க்க அமர்ந்துவிட்டார்கள்.

No comments: