இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம்



எம்.என்.ராய் எழுதிய இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம் என்ற சிறு நூலில் வரலாற்றுப் பார்வையில் இஸ்லாம் அதன் துவக்கத்தில் வாள்முனையில் பல தேசங்களை கைப்பற்றியதையும் பின்னர் ஒரு கட்டத்தில் அவர்கள் போர்களை முழுமையாக நிறுத்தி வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு செல்வம் சேர்த்ததையும் அவர்களின் ஓரிறைக் கோட்பாடும் வணிக வெற்றியும் செல்வமும் எப்படி அறிவியல் , தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் பயன்பட்டது என்றும் சொல்கிறார்.ஓரிறைக் கோட்பாடு இயல்பாகவே பகுத்தறிவுக்கும் நிரூபணவாதத்திற்கும் உதவின என்கிறார்.அதுவே கிறுஸ்துவத்தின் வளர்ச்சியால் கைவிடப்பட்ட கிரேக்க அறிவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.ஐரோப்பியர்கள் அராபியர்களிடமிருந்து இந்தக் அறிவை பெற்றார்கள்.அதுவே மறுமலர்ச்சியை உருவாக்கியது என்கிறார். இறைவனுக்கு நிகராக வேறு யாரையும் இணையாக வைக்காதது இஸ்லாத்தின் முக்கியமான விஷயம் என்கிறார்.

இந்தியாவில் இஸ்லாம் வந்த போது அது அராபிய நாயகர்களால் வரவில்லை.மாறாக அது ஆடம்பர வாழ்வில் சீரழிந்து கிடந்த பராசீகர்களாலும் மத்திய ஆசியப் பகுதியை சேர்ந்தவளாலுமே கொண்டு வரப்பட்டது என்கிறார்.பெளத்தப் புரட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு ,அதன் விளைவாக இந்தியச் சமூகத்தை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த பார்ப்பனியப் பிற்போக்குச் சாதிகளுக்குப் பலியாகியிருந்த லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாமின் நம்பிக்கைச் செய்தியையும் விடுதலையையும் வரவேற்றனர் என்கிறார்.

ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் அப்போதைய புறத்தேவையை இஸ்லாம் நிறைவேற்றியிருக்கிறது என்கிறார்.அதனால் அதை அந்த வரலாற்று பாத்திரத்தில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எம்.என்.ராயின் தரப்பு.1939யில் இதை எழுதியிருக்கிறார்.இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கதோடு வாழ அது உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் ஆற்றிய பங்கை புரிந்து கொள்வதே வழி என்கிறார்.இதை "தூய" தமிழில் வெ.கோவிந்தசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.எம்.என்.ராயின் பற்றியும் நூலில் ஒரு கட்டுரை இருக்கிறது.

No comments: