மாற்று சினிமாவிற்கான அரங்குகள்



ஸ்வர்ணவேலுக்கு அளிக்கப்பட்ட லெனின் விருது விழாவிற்கு நேற்று சென்றிருந்தேன்.நிறை மக்கள் மேடையிலும் கூட்டத்திலும்.கூட்டத்தில் என் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் தீவிரமாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதை பிரதியை வாசித்துக்கொண்டிருந்தார்.ஸ்வர்ணவேல் காலச்சுவடு இதழில் வீடியோ கேம்ஸ் திரைப்படங்களின் இடத்தை பிடிக்கலாம் என்று எழுதிய கட்டுரையை படித்ததாக நினைவுள்ளது.இது போன்ற விருதுகளின் முக்கிய பங்களிப்பு வெகுஜன தளத்திற்கு வெளியே செயல்படுபவர்களுக்கு அது ஒரு சிறு மகிழ்வையும் நிறைவையும்  அளிக்கிறது.இரண்டாவது அவர்களின் பங்களிப்பை அதுவரை அறியாதவர்களுக்கு ஒரு திறப்பாக அந்த வாய்ப்பு அமைகிறது.தமிழ் ஸ்டுடியோ அருண் தீவிர சினிமா சார்ந்த பல முக்கிய விஷயங்களை செய்துவருகிறார்.பியூர் சினிமா அங்காடி நல்ல முயற்சி.அவர் தொழில்முனைவராக முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேடையில் மிஷ்கின் அருண்மொழி குறித்து பேசியது  மிகவும் நன்றாக இருந்தது.நான் முதலில் இயக்கிய ஒரு குறும்படத்திற்காக அருண்மொழியை சந்தித்தேன்.அப்போது பிரசாத் அகாதெமியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.பல்வேறு உதவிகளை செய்தார்.ஒளிப்பதிவு செய்தார்.அவர் இன்று மாலை ஆறு மணிக்கு உங்களை சந்திக்கிறேன் என்று ஆறு பேரிடம் சொல்வார்.பின்னர் ஆறு மணிக்கு ஏழாவதாக ஒருவரை சென்று சந்திப்பார்.அவருக்கு இலக்கிய உலகில்,சினிமா உலகில்,ஊடகத்துறையில்,அரசியலில் பல்வேறு மனிதர்களை தெரியும்.அவரிடம் உதவி பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு.அவர் சென்னையின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கே அவருக்கு சென்று சந்திக்க ஒருவர் இருப்பார்.அவருக்கு சென்னையின் Topography முழு பரிச்சயம்.எந்த இடத்துக்கும் கூகிள் மெப்ஸை விட எளிதில் செல்லக்கூடிய வழியை அறிந்து வைத்திருப்பார்.

தீவிர அல்லது மாற்று சினிமா ,இலக்கியம்,கலைகள் குறித்தெல்லாம் எனக்கு பல்வேறு குழப்பான  எண்ணங்கள் உண்டு.இவைகள் ஒரு சமூகத்தை மாற்றவோ திசை திருப்பவோ முடியாது என்றே நினைக்கிறேன்.அதனால் அது எத்தனை தீவிரமாக இருந்தாலும்   இல்லாவிட்டாலும் சமூகம் பெரிதாக பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது.வரலாற்றின் திசையில் தான் சமூகம் செல்லும்.மிகப்பெரிய Phenomenonனான காந்தி கூட வரலாற்றை திசை திருப்ப முடியவில்லை.அது தன் போக்கில்தான் சென்றது.செல்கிறது.செல்லும்.பண்பாட்டு மாற்றங்கள் மிக மிக மெல்லத்தான் நடக்கும்.அந்த மாற்றங்கள் மேற்கட்டுமானத்தை ஒரிரு நூற்றாண்டுகள் பின்னர் கூட பாதிக்கும்.அப்படி மாறுவதே சாத்தியமும் கூட.நிலப்பிரபுத்துவ காலத்தின் விழுமியங்களை கொண்டுள்ள இந்தியன் மிக மெல்ல பொருளாதார மாற்றங்கள் காரணமாக வரிசையில் நிற்க வேண்டிய தனிமனித விழுமியங்களை இப்போது கற்றுக்கொள்கிறான்.இது நம் பண்பாட்டில் கற்றுத்தரப்படவில்லை.இதுவே நமது வேலைச்சூழலுக்கும் மேற்குலகின் வேலைச்சூழலுக்குமான முக்கிய வித்யாசம்.இது என் பார்வை.ஆனால் இப்படியான ஒரு பார்வை இருந்தால் பண்பாட்டுத்தளத்தில் தீவிரமாக செயல்பட முடியாது என்றும் தோன்றுகிறது.செயல்பாட்டாளர்களுக்கு ஒரு தீவிரமான செயலூக்க மனநிலை தேவைப்படுகிறது.அதற்கு  லட்சியவாதங்கள் உதவுகிறது.

இன்று சினிமா எடுப்பது  எளிதாகிவிட்டது.யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டால் பணம் கூட பெரிய விஷயம் இல்லை.பிரச்சனை அதன் விநியோகத்தில் மட்டுமே இருக்கிறது.அதை எப்படி மக்களை பார்க்க வைப்பது என்பது தான்.ஒரு வகையில் இன்று இலக்கிய புத்தகங்களின் சிக்கல் கூட அதுதான்.மக்களை எப்படி படிக்க வைப்பது.இன்று புத்தகங்களை வாங்கி விடுகிறார்கள்.ஆனால் வாசிப்பதில்லை.இணையத்தில் ஒரு படத்தை சிறு தொகை செலுத்தி பார்க்கலாம் என்று முயற்சித்தாலும் அது தமிழகத்தை பொறுத்த வரை பெரிய பலன்களை தராது.தமிழகத்தை பொறுத்த வரை இணையத்தில் ஒன்றை வாசிக்க,பார்க்க வேண்டுமென்றால்அது இலவசமாகத்தான் இருக்க வேண்டும்.தீவிர சினிமாவிற்கான திரையரங்குகள் அந்த வகையில் ஒரு மாற்றாக அமையலாம்.ஐம்பது பேர் அமரக்கூடிய அரங்குகள் உருவாக்கப்பட்டு சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டால் அது சுயாதீன சினிமாக்களை எடுப்பவர்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமையும்.ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் ஒரு திரைப்படம்  அல்லது ஆவணப்படம் திரையிடப்படலாம்.மாலை காட்சிகள் மட்டும் வைக்கலாம்.அதன் மூலம் பணத்தை திரும்ப எடுப்பது போன்ற விஷயங்கள் சாத்தியப்படாமல் போகலாம்.ஆனால் அது அரங்கில் திரையிடப்பட்டு ஒரு ஜனத்திரள் கட்டணம் செலுத்தி பார்த்தது என்ற நிறைவை அளிக்கும்.அப்படியான பத்து அரங்குகளாவது தமிழகம் முழுவதும் இயங்கினால் அது நல்ல பயன்களை அளிக்கும்.

No comments: