நாம் பிறர்


தமிழ் தேசியவாதத்தை முன்வைக்கும் கட்சிகள் வளர்ந்து வரும் சூழலில் ,ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் தமிழை தவிர்த்த பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழலால் ரஜினிகாந்தை ஆதரிக்கலாம் என்று ஸ்டாலின் ராஜாங்கம் சொல்லியிருக்கிறார்.மேலும் அவரிடம் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் போக்கு இருந்தால் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளை இழக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.இரண்டும் முக்கியமான அவதானிப்புகள்.
பி.ஏ.கிருஷ்ணன் ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழகத்திற்கு வெளியே குடியேறிய தமிழ் பிராமணர்களின் புள்ளிவிபரத்தை பட்டியலிட்டு இது பெரிய அளவிலான குடியேற்றம் என்று சொல்லியிருந்தார்.இன்று எழுதிவரும் இளம் எழுத்தாளர்களில் அநேகமாக யாரும் தமிழ் பிராமணர்கள் இல்லை.எழும்பூர்,சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் பெரிய அளவில் இளம் தமிழ் பிராமணர்கள் வழக்கறிஞர்களாக இல்லை.இலக்கியம் , சட்டத்துறை,கட்சி அரசியல் இவைகளுக்கு மத்தியில் ஏதோ தொடர்பு இருக்கிறது.இன்று இந்த மூன்று துறைகளிலும் அநேகமாக தமிழ் பிராமணர்கள் இல்லை.

தமிழை தாய் மொழியாக கொள்ளாத தமிழர்கள் இன்றும் இலக்கியம்,சட்டம்,அரசியலில் இருக்கிறார்கள்.ஆனால் தமிழ் தேசியவாதம் தொடர்ந்து வளர்ச்சி பெறும் என்றால் இது தொடர்ந்து குறையும் என்று தோன்றுகிறது.அவர்கள் வேறு மாநிலங்களுக்கு,நாடுகளுக்கு எந்த வித அச்சுறுத்தல் பாதுகாப்பின்மை பிரச்சனைகள் ஏற்படாவிட்டாலும் குடிபெயர்வது அதிகரிக்கும்.

தமிழகத்தில் தொடர்ந்து மற்றமையின் மீதான ஒரு வெறுப்பை எளிதாக உருவாக்கமுடிகிறது.அதே நேரத்தில் அது பெரிய வன்முறை அற்றதாகவும் இருக்கிறது.ஆனால் அது மக்கள் மத்தியில் சில மனப்பதிவுகளை உருவாக்கியபடியே இருக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து மத்திய அரசால் கொண்டுவரப்படும் தொழிற் துறை திட்டம் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது.தமிழகத்தில் மிக எளிதாக விவசாயம் நண்மை என்பதும் , தொழிற்துறையின் வளர்ச்சி தீமை அளிப்பதும் என்ற இருமைகளின் மனப்பதிவுகள் தொடர்ந்து பிரச்சாரிக்கப்படுகிறது.அது ஏற்றுக்கொள்ளவும் பட்டுள்ளது.நியூட்ரினோ திட்டம் தீவிரமாக எதிர்க்கப்பட்டது.மித்தேன் எரிவாயு திட்டம் எதிர்க்கப்பட்டது.பெரும்பாலானோருக்கு அதைப்பற்றிய மனப்பதிவுக்கு அப்பால் எதுவும் தெரியாது.

உண்மையில் விவசாயம் எந்தளவு வருமானத்தை வழங்கும் தொழிலாக உள்ளது என்று எந்த விவசாயிடம் கேட்டாலும் சொல்வார்.குறைந்தது இருபது ஏக்கர் நிலம் இருந்து நல்ல தண்ணீர் பாசனம் இருந்தால்தான் ஒரளவு வருமானம் பார்க்க முடியும்.அதுவும் இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்றால் விவசாயம் உடனே கைவிடப்படும்.இல்லையென்றால் வருடம் ஒரு லட்சம் பார்ப்பதே பெரிய விஷயம்.தொழில் துறைகளின் வளர்ச்சிதான் வேலை வாய்பபுகளை உருவாக்கும்.தொடர்ந்து தொழிற் வளர்ச்சி தடுக்கப்படும் என்றால் தமிழகம் கேரளம் போன்ற ஒரு பண்பாட்டு தேசமாக மட்டுமே எஞ்சும்.

No comments: